பொங்கல் பரிசு: அரசு டோக்கன் வழங்குவது பற்றி அவசர சுற்றறிக்கை வெளியிட ஹைகோர்ட் உத்தரவு
பொங்கல் பரிசு 2500 ரூபாய்க்கான அரசு அதிகாரபூர்வமான டோக்கன்கள் வழங்குவது தொடர்பாக அவசர சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பொங்கல் பரிசு 2500 ரூபாய்க்கான அரசு அதிகாரபூர்வமான டோக்கன்கள் வழங்குவது தொடர்பாக அவசர சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு நாளை சுற்றறிக்கை வெளியிடவில்லை என்றால் மீண்டும் திமுக உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக கட்சியின் சின்னம் இடம் பெற்றுள்ளது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்த பொங்கல் பரிசு தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக அதிமுக கட்சியினர் சுய விளம்பரம் தேடி கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த டோக்கன்கள் ஆளும்கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த பரிசு தொகை போய் சேராது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் முறையிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்தனர். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன் விநியோகிக்கப்பட்டதாகவும், கட்சியினர் ஆர்வ மிகுதியால் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் அரசின் அதிகாரபூர்வ டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பொங்கல் பரிசுக்கான அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப் பொருள் மற்றும் பரிசுத் தொகை வழங்க வேண்டுமென ரேஷன் கடைகளுக்குச் சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.
அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், அரசு வழங்கும் அதிகாரபூர்வ டோக்கன்களைத் தவிர வேறு எந்த டோக்கனும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். அரசின் சுற்றறிக்கையை டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை திமுக நாடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.