குடிநீரில் மலம் கலந்த வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
சென்னை: புதுக்கோட்டையில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியின் இறையூர் கிராமத்தின் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டை சாதி வெறியர்களை கைது செய்யாதது ஏன்? ஹென்றி திபேன் கேள்வி
வேங்கைவயல் விவகாரம்
இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம் மற்றும் கிராமத்தின் தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது பட்டியலின மக்களின் புகார் மூலம் தெரிய வந்தது.
காவல்துறை விசாரணை
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ஆதிதிராவிட மக்களை அழைத்து சென்று கோயிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், இரட்டை குவளை முறையை பின்பற்றிய டீ கடைக்காரரும் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து குடிநீரில் மலம் கலந்தவர்கள் குறித்து காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குற்றவாளிகள்
இருந்தும் சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிபிசிஐடி-க்கு மாற்றம்
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, இதுவரை 85 பேரை விசாரித்ததாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
டிஜிபி உத்தரவு
புதுக்கோட்டை வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.