லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை.. யாருக்கும் ஆதரவும் கிடையாது.. ரஜினி அதிரடி அறிவிப்பு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். எனினும் ஓராண்டு ஆகியும் இது வரை அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிதாக தொடங்கிய கமல் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஜினியின் அறிவிப்போ கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது.
போயஸ் தோட்டம்
ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்களும் மன்ற நிர்வாகிகளும் காத்திருந்தனர். இந்த நிலையில் சுமார் 8 மாதங்கள் கழித்து இன்று போயஸ் தோட்டத்தில் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார்.
பரபரப்பான அறிக்கை
அப்போது நாடாளுமன்றத் தேர்தல், புதிய கட்சி குறித்த அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் ஒரு பரபரப்பான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
எந்தக் கட்சிக்கும் கிடையாது
அதில் அவர் கூறுகையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. தமிழக சட்டசபைத் தேர்தல்தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது.
தண்ணீர் பிரச்சினை
அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ , மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக் கூடாது. தமிழகத்தின் முக்கிய பிரச்சினை தண்ணீர் வரவிருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கும் நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த் என ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.