அன்று முத்துமணிக்கு போன் போட்ட ரஜினி.. அடுத்தடுத்து ஆலோசனை.. போயஸிலிருந்து சீக்கிரம் வாய்ஸ் வருமோ!
நவம்பரில் கட்சி தொடங்கி மதுரையில் மாநாடு நடத்த ரஜினி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது
சென்னை: ரஜினி ஒருவருக்கு போன் போட்டு அன்புடன் விசாரித்துள்ளார்.. அவர் பெயர் முத்துமணி.. யார் இவர்? ரஜினியின் அரசியல் வருகைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
அரசியல் வருகை குறித்த கால் நூற்றாண்டு எதிர்பார்ப்பு இருந்தாலும், சலித்து ஓய்ந்த ரஜினி ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டுள்ளது.. இதில் பலர் "இப்போது இல்லை என்றால், எப்போதுமே இல்லை" என்று வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தி போஸ்டர்களை தமிழகம் முழுவதும் அடித்து ஒட்டினர்.
பொதுவாகவே ரஜினி வருகை குறித்த பேச்சு என்றால், பரபரப்பாகிவிடும் மாவட்டம் மதுரைதான்.. அந்த போஸ்டர் விவகாரத்தின்போது, ரஜினி ரசிகர்கள் தினம் தினம் போஸ்டரை இங்கு ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
நல்லாட்சி
"நான் எம்ஜிஆர் அல்ல.. எம்ஜிஆரைப்போல நல்லாட்சி தருவேன்" என்றும், "நாளைய தமிழகமே 2021", "நீங்க முன்னாலே, தன்னாலே என்று கூறியும் ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது, தலைவரால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் தரமுடியும்" என்று விதவிதமாக சொல்லி போஸ்டர்களை ஒட்டினர்.
போஸ்டர்
இந்த போஸ்டர்களை பார்த்து டென்ஷன் ஆகிவிட்ட ரஜினி தரப்பு, ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், இனி இப்படியெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டக்கூடாது, தலைமை சொல்லும்வரை அமைதி காக்கவும் என்று தெரிவித்தது.. ஆனால், ரஜினி ரசிகர்கள், இதையும் போஸ்டர் அடித்து ஒட்டி, இனிமேல் அடிக்க மாட்டோம் என்றனர்.
ரசிகர்கள்
எனினும், ரஜினி கட்சி ஆரம்பித்தால், தன் முதல் மாநாட்டை மதுரையில்தான் கூட்டுவார் என்று பலமுறை சொல்லப்பட்டு வருகிறது. இந்த விஷயம் சற்று நாள் ஓய்ந்திருந்த நிலையில், மறுபடியும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.. இதற்கு காரணம் முத்துமணிதான்.. யார் இந்த முத்துமணி?
முத்துமணி
''ரஜினிக்கு, மதுரை மாவட்டத்துல, முதல் ரசிகர் மன்றத்தை துவங்கியவர்தான் இநத் முத்துமணி... இப்போ இவருக்கு உடம்பு சரியில்லையாம்.. அதனால் சென்னை அரசு மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி, உடனே முத்துமணிக்கு போன் போட்டு பேசியுள்ளார்.. உடல்நிலை எப்படி இருக்கிறது என்று அன்புடன் விசாரித்திருக்கிறார்.. இப்படிப்பட்ட நேரத்தில்தான் எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணனும்... உடல்நிலை தேறி சீக்கிரமா வாங்க" என்று சொல்லி தைரியமும் சொன்னாராம்.
போன் போட்ட ரஜினி
45 வருஷத்துக்கு முன்பே இதற்கான முதல் விதையை போட்டவர் முத்துமணிதான்.. இவர் தொடங்கிய ரசிகர் மன்றம்தான் ரஜினியின் முதல் ரசிகர் மன்றமாகும்.. எப்போதுமே பழசை மறக்காத ரஜினி, முத்துமணிக்கு போன் போட்டது, சோர்ந்து போயிருந்த மன்ற நிர்வாகிகளுக்கு புது தெம்பை தந்துள்ளதாம். முத்துமணியுடன் எப்போதுமே போனில் பேசுவாராம் ரஜினி.. இப்போது ஆஸ்பத்திரியில் இவர்கள் 2 பேரும் பேசியதுகூட ஆடியோவாக இணையத்தில் வைரலாகிறது.
குஷி
இப்படித்தான் மும்பையில், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முரளி என்ற ரசிகருடன் ரஜினி பேசியிருந்தார்.. அடுத்து முத்துமணி.. "உடம்புக்கு என்ன பிரச்சனை? சரியாயிடும்.. கவலைப்படாதீங்க" என்று விசாரித்த தொனியை கேட்டு மன்ற உறுப்பினர்களுக்கு புல்லரித்து போய்விட்டதாம். இதைவைத்துதான் கட்சி ஆரம்பித்தவுடன், மதுரையில் முதல் மாநாடு நடத்த, ரஜினி திட்டமிட்டு வருவதாக ரசிகர் மன்ற தரப்பில் சொல்கிறார்கள்.. நவம்பர் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளும் நடந்து வருகிறதாம்.
ஆச்சரியம்
ஆனால், ஒரு விஷயம் ஆச்சரியமாகவே உள்ளது.. விஜயகாந்த்துக்கு மதுரைதான் நெருக்கம்.. அதேபோல, கமல் மதுரையில்தான் கட்சி ஆரம்பித்தார்.. விஜய்யை அரசியலுக்கு வரும்படி, வருடா வருடம் அழுத்தம் தந்து போஸ்டர் அடித்து ஒட்டுவதும் மதுரையில்தான்.. இப்போது ரஜினிக்கும் மதுரை சென்ட்டிமென்ட் ஆகிவிட்டது வியப்பாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.