ராஜ்யசபா சீட்... முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தராமல் புறக்கணித்ததா திமுக? உண்மை நிலவரம் என்ன?
சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்கிற கருத்தை முன்வைத்து அக்கட்சிக்கு எதிராக தீவிரமான பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.
திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களாக திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ மற்றும் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா என்பது சீனியர்கள் பங்கேற்கக் கூடிய சபை. ஆகையால் சீனியர் என்ற அடிப்படையில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி சிவாவின் திராவிடர் இயக்க பார்வையை புரிந்து கொள்ளாத சிலர் அவரது தேர்வை விமர்சித்து வருகின்றனர் என்கின்றனர் சீனியர் திமுகவினர். கடந்த ராஜ்யசபா தேர்தலிலேயே என்.ஆர். இளங்கோ பெயர் அடிபட்ட நிலையில் இம்முறை அவருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
திமுக அந்தியூர் செல்வராஜ்
3-வது வேட்பாளராக கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு கிடைக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜூக்கு ராஜ்யசபா சீட் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
திமுகவில் ஆதங்கம்
உடனேயே திமுகவில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவில்லையே என்கிற ஆதங்கத்தை திமுகவிலேயே சிலர் உருவாக்கி வருகின்றனர். இது தொடர்பாக திமுக சீனியர்களிடம் பேசிய போது, கட்சியில் மூத்த முஸ்லிம் பிரதிநிதி என்றால் ரகுமான்கானை சொல்லலாம். அவர் வயது மூப்பின் காரணமாக டெல்லி பயணம் மேற்கொள்ளும் நிலையில் இல்லை.
ஜூனியர்கள் என்பதால் பட்டியலில் இல்லை
ஏற்கனவே முகமது சகி போன்றவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மறைந்த ஆயிரம் விளக்கு உசேனுக்கு எம்.எல்.ஏ. வாய்ப்பையும் வழங்கியது திமுக. தற்போது ராஜ்யசபா சீட்டுக்கு சில முஸ்லிம் நிர்வாகிகள் பெயர்கள் அடிபட்டன. அவர்கள் மிகவும் ஜூனியர்கள். இந்த நிலையில்தான் திமுக தலைமை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தின் அந்தியூர் செல்வராஜூக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
அதிமுகவின் வியூகமா?
திமுக தலைமையின் இந்த முடிவு சரியானதும் கூட. சட்டசபை தேர்தல்களில் முஸ்லிம் நிர்வாகிகளில் இளையவர்களுக்கு வாய்ப்பு தரப்படுவது தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரை உயர்ஜாதியினரை விட ஒடுக்கப்பட்ட ஜாதியினர், சிறுபான்மையினருக்கு எப்போதும் கட்சியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுதான் வருகிறது என்பதுதான் வரலாறு என்கின்றனர். திமுகவில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனத்தை முன்வைத்தே அதிமுகவில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது; அதை திமுக எதிர்கொள்ளும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.