கொரோனா மருத்துவ கருவிகளுக்கான ஜிஎஸ்டி குழுவில் பிடிஆர் புறக்கணிப்பு- ரவிக்குமார் எம்.பி. கண்டனம்
சென்னை: கொரோனா மருத்துவ உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்வது தொடர்பான அமைச்சர்கள் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த வாதங்கள், மாநில உரிமைகளை வலியுறுத்துவதாக இருந்தது.
பிடிஆர் முன்வைத்த கோரிக்கை
நாடு முழுவதும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கருத்துகள் ஆழ்ந்த விவாதப் பொருளாகி இருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில், கொரோனா சிகிச்சை தொடர்பான அனைத்து கருவிகள், உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி இருந்தார்.
மத்திய அரசு குழு
அவரது இந்த யோசனையை ஏற்று மத்திய அரசு 8 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான இந்த குழுவில் குஜராத் துணை முதல்வர் நிதின்பாய் படேல், உ.பி. நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா, தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ், ஒடிஷா நிதி அமைச்சர் நிரஞ்சன் புரி, கேரளா நிதி அமைச்சர் பாலசந்திரன், கோவா போக்குவரத்து துறை அமைச்சர் மெளவின் கொடின்ஹோ, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மத்திய அரசு குழுவில் பிடிஆர் இல்லை
ஆனால் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு இந்த குழுவில் இடம்தரப்படவில்லை. இதுவும் கடும் சர்ச்சையானது. மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கைக்கு இந்திய தொழில்முனைவோர் கூட்டமைப்பு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மத்திய அரசுக்கு பரிந்துரை
இதனிடையே மத்திய அரசு அமைத்த அமைச்சர்கள் குழுவும் கொரோனா மருத்துவ உபகரணங்கள் மீதாஜ ஜி.எஸ்.டி. வரி தொடர்பான ஆய்வு அறிக்கையை திங்கள்கிழமையன்று தாக்கல் செய்துள்ளது. அதில், கொரோனா மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5% குறைக்கலாம் என இந்த குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மொத்தமாக ஜிஎஸ்டி வரியையே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
ரவிக்குமார் எம்பி கண்டனம்
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார் இதனை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், தங்களுக்கு ஏற்ப பரிந்துரை அளிக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்த குழுவில் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்படவில்லை என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என எழுதியுள்ளார்.