இதுவரை இல்லாத அதிரடி.. பொங்கியெழுந்த ஸ்டாலின்.. ஆவேச அறிக்கையின் பின்னணி என்ன தெரியுமா?
சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கிய இடத்தில் சில இடங்களில் திமுக-வினர் போட்டியிட்டு வென்றனர். இதையடுத்து காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சியும் திமுக வசம் வந்தது.

கூட்டணி
இந்த தேர்தலில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது திமுக. கூட்டணிக்காக கும்பகோணம் மாநகராட்சிக்கு ஒதுக்கியது திமுக. நகராட்சித் தலைவர் பேரூராட்சித் தலைவர் நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றி வருகின்றனர்.

அதிருப்தி
இதனால் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியில் அறிக்கைகளை வெளியிட்டனர். இந்நிலையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. கட்சி சொன்னதை மீறி வெற்றி பெற்றவர்கள், ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து பாருங்கள் என யாரும் எதிர்பார்க்காத வகையில் காட்டமான அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கோபத்துக்கான காரணம்
சட்டசபைத் தேர்தலில் வென்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது திமுக. மாநில சுயாட்சி, உரிமை, என மாநில உரிமைக்காக ஆட்சியில் அமர்ந்ததும் தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதேநேரம், தன்னை தேசிய தலைவராக அடையாளப்படுத்தும் முயற்சியையும் தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் 'உங்களில் ஒருவன்' என தன் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவுக்கு பல மாநிலங்களில் இருந்து தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வந்தார்கள்.

கட்டுப்பாடு
தன்னை தேசிய தலைவராக முன்னிறுத்தி வரும் இந்த நேரத்தில், தன்னுடைய சொந்த கட்சியினரே, தான் கூறியதை மீறி செயல்பட்டதை திமுக தலைமை விரும்பவில்லை. அதோடு, பத்து வருடத்துக்கு முன்பு இருந்த அதே நிலை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில்லும் தலைமை கறாராக இருக்கிறது. அதனால் தான் தன்னுடைய அறிக்கையில் 'கட்டுப்பாடு' என்ற வார்த்தையை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார் முதல்வர். அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி தன்னுடைய கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாரோ, அதைப்போல அடிமட்டம் வரை தன்னுடைய கட்சியைக் கட்டுகோப்பாக வைத்திருக்கவே ஸ்டாலின் விரும்புகிறார்.

கூட்டணி கட்சிகள்
நகராட்சி அமைப்புகளில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுக கைப்பற்றியதும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வரிடம் பேசி இருக்கிறார்கள். அதன்பிறகே தங்கள் அதிருப்தியை பொதுவெளியில் வைத்திருக்கிறார்கள். இது செய்திகளிலும், சமூக வலைதளத்திலும் பேசு பொருளானதும், முதல்வர் ஒரு காட்டமான அறிக்கையை வெளிட்டார். சொந்த கட்சியாகவே இருந்தாலும், தவறு செய்தால் தட்டிக் கேடும் தலைவர் என்று சமூக வலைதளம் பாராட்டி வருகிறது.

வெற்றி
நடந்து முடிந்த தேர்தலில், கூட்டணி கட்சிக்கு பெரிய இடங்கள் ஒதுக்கவில்லை திமுக. ஆனாலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது கூட்டணி கட்சிகள். அவர்களின் வெற்றி திமுகவை கொஞ்சம் யோசிக்கவைத்திருக்கிறது. அதனால் தான், கும்பகோண மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தூக்கி கொடுத்திருக்கிறது திமுக.

கூட்டணி தர்மம்
கூட்டணிக்காக உழைக்கிறோம், ஆனாலும் எங்களுக்கு பெரிய அங்கீகாரம் இல்லை, நகராட்சி, பேரூராட்சியில் 'பவர்' இல்லை என குமுறி இருக்கிறார்கள். இதனாலேயே கணிசமாக இடங்களில் நகராட்சி, பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை தூக்கி கூட்டணிக்கு கொடுத்தது திமுக. 2024 தேர்தலில் தேசிய அளவில் கவனம் பெற திமுக நினைக்கிறது. அதற்கு இந்த கூட்டணி மிகவும் அவசியம். இதனால் தான் என்ன ஆனாலும், தன்னுடைய கட்சியினரை ராஜினாமா செய்யச்சொல்லி கூட்டணி தர்மத்தைக் காத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications