ஆவின் நெய் விலை உயர்வுக்கு என்ன ஜிஎஸ்டி வரி உயர்வு - அதிகாரிகள் விளக்கம்
பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்ந்திருப்பதும் விலை உயர்வுக்கு ஓர் காரணமாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பாலை தவிர்த்து மற்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆவின் நெய்யின் விலையும் உயர்ந்துள்ளது. பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்ந்திருப்பதும் விலை உயர்வுக்கு ஓர் காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதை தவிர்த்து மற்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நெய், பாதாம் பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

பால் பொருட்கள் விலை உயர்வு
ஆவின் நெய் லிட்டருக்கு 30.00ரூபாய் வரையிலும், 1கிலோ 40.00ரூபாய், பாதாம் பால் பவுடர் 1 கிலோ 100.00ரூபாய், தயிர் லிட்டருக்கு 6.00ரூபாய் என கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டு புதிய விற்பனை விலை மார்ச் 4 முதல் அமலுக்கு வந்துள்ளது. பாலைப் போல் அல்லாமல் ஆவினின் மற்ற பொருட்களை குறைந்த மக்களே பயன்படுத்துகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று நுகர்வோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வலுக்கும் எதிர்ப்பு
அதே நேரத்தில் ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி கடந்த வாரம் தனியார் நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது ஆவின் பால் பொருட்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நெய்
இதுவரை ஆவின் நெய் கிலோ ஒன்றுக்கு ரூ. 515க்கு விற்பனையாகி வந்த நிலையில், ரூ. 20 அதிகரிக்கப்பட்டு இனி ரூ. 535க்கு விற்பனையாகும். இதேபோன்று 500 மில்லி தயிரின் விலை ரூ. 3 அதிகரிக்கப்பட்டு இனி ரூ. 30க்கு விற்பனையாகும். ஆவின் நெய் விலையைக் காட்டிலும் தனியார் வழங்கும் நெய்யின் விலை சற்று அதிகமாகும்.

கள்ளச்சந்தையில் விற்பனை
தனியார் நிறுவனங்களான திருமலா, ஜி.ஆர்.பி., ஹட்சன் நிறுவனங்கள் நெய்யை கிலோ ஒன்றுக்கு ரூ. 650 - 695 க்கு விற்பனை செய்து வருகின்றன. இவ்வாறு விலை வித்தியாசம் ரூ. 100-200 வரை இருக்கும்போது கள்ளச் சந்தையில் ஆவின் நெய் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

விலை உயர்வுக்கு காரணம்
இதேபோன்று, ஆவின் நெய்யை வாங்கி, அதை மாற்று நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யும் ஆபத்தும் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்கு அதிக சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. இதேபோன்று, பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்ந்திருப்பதும் விலை உயர்வுக்கு ஓர் காரணமாக கூறப்படுகிறது.

விற்பனை விலை
சில்லறை விற்பனையில் ஆவின் பொருட்கள் ஒரு விலைக்கும், ஆன்லைன் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் இன்னொரு விலைக்கும் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications