ஓமிக்ரான் வேகமா பரவுகிறதே.. தப்பிக்க என்ன செய்யலாம்.. நாம் செய்யவேண்டியது என்ன? மருத்துவர் விளக்கம்!
சென்னை: ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக உலகெங்கும் பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் என்னதான் தீர்வு என விவரித்திருக்கிறார்கள் நாம் தொடர்பு கொண்ட மருத்துவர்கள்.
கொரோனா தொற்று முதல் அலை எல்லோரையும் வீட்டுக்குள் கட்டி வைத்தது. 2020ம் ஆண்டு மொத்த உலகமும் லாக்டவுன் இருந்தது. 2021 இரண்டாம் அலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் தீவிரத்தன்மை அதிகமாக இருந்ததோடு, இறப்பு விகிதமும் அதிகரித்தது.
கொரோனா இரண்டாம் அலையில்தான் தடுப்பூசி குறித்த புரிதல்வந்து, மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளத் துவங்கினர். இப்போதும் மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி முகாம்களை அதிகப்படுத்தி, தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதோரையும் கண்டறிந்து தடுப்பூசியை கொடுத்துவருகிறார்கள்.
இந்தியா முழுவதும் புத்தாண்டுக்குப் பிறகு கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருக்கிறது. கட்டுக்குள் இருந்த கொரோனா திடீரென அதிகரித்திருப்பதால் அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம்காட்டி வருகின்றன. ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என தேவைக்குத் தகுந்தாற்போல மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கத்துவங்கியுள்ளன.

ஒமிக்ரான்
உலகையே அச்சுறுத்திவரும் ஒமிக்ரோன் வைரஸ், டெல்டா வகை வைரஸ்களை விட அதிவேகமாக பரவக்கூடியது என்று நிரூபணமாகியிருக்கிறது. அதேபோல், டெல்டா அளவுக்கு பாதிக்காது என்றும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் அதிசீக்கிரமாகவே நுழைந்துவிட்டது. தற்போது ஒமிக்ரானால் உயிரழப்பு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சுவை, வாசனை, காய்ச்சல் என பல அறிகுறிகள் இருந்தன. ஆனால், ஒமிக்ரான் வைரஸ் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றன. இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடாதவர்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

உயிரிழப்பு
ஒமிக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்து எட்நூறுக்கும் அதிகமானோர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். ஒமிக்ரானின் தாக்கம் அதிகரிப்பதால் உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் எச்சரித்திருக்கிறது.

செய்ய வேண்டியது என்ன
தமிழகத்திலும் ஒமிக்ரானின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒமிக்ரான் அதிகமாக பரவும் பட்சத்தில் செய்யவேண்டியது குறித்து "ஒன்இந்தியாதமிழுக்காக" மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம். '' ஓமிக்ரான் பரவும் திறன் மிகவும் தீவிரமானது. அது ஆய்விலும் நிரூபணமாகி இருக்கிறது. அதனால் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்படும்.

ஆபத்து அதிகரிக்குமா
டெல்டா வேரியண்ட்டைவிட, ஒமிக்ரானின் பரவும் வேகம் மிக அதிகம் என்றாலும், ஆபத்து குறைவு. ஒமிக்ரானின் தன்மையால் நிறைய பேருக்கு தொற்று ஏற்பட்டு, மருத்துவமனைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. இது கொஞ்சம் கவலைப்பட வேண்டிய விஷயம் தான், ஆனால் பயப்படத்தேவையில்லை. உலக அளவில் ஒமிக்ரானின் தாக்கம் சீக்கிரம் குறையும்.

தடுப்பூசி ஆயுதம்
ஒமிக்ரானில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி ஒரு பேராயுதமாகவே இருக்கும். இது ஆய்விலும் தெரியவந்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரானின் தொற்று தீவிரம் குறைவாகவே இருக்கிறது. அதேபோல், ஏற்கெனவே கொரோனா வந்து, அதன்பிறகு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு ஒமிக்ரானின் தீவிரத்தன்மை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்
தடுப்பூசி எடுக்காதவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் பூஸ்டர் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த வாரங்களில் பூஸ்டர் கிடைக்கிறது. மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குங்கள். தனிமனித இடைவெளியைக் கடைபிடியுங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிருங்கள். கொரோனா இன்னும் ஓயவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Recommended Video

லாக்டவுன்
ஒமிக்ரானின் அலை இன்னும் மூன்று வாரங்களில் உச்சத்தை அடையும். அதன்பிறகு பிப்ரவரி மாதம் இறுதியில் படிப்படியாக குறையும். அதுவரை கட்டுப்பாடுகள் அவசியம் தான். எங்கெல்லாம் தொற்று அதிகரித்து மருத்துவமனையில் அட்மிஷன் அதிகரிக்கிறதோ அங்கு மட்டும் முழு லாக்டவும் வரலாம். தேவைக்கு தகுந்தாற்போல் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தால்தான் சீக்கிரம் ஒமிக்ரானின் தாக்கம் குறையும்'' என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
டெல்டா வைரஸைவிட தீவிரம் கம்மி என்றாலும், நம்மால் வயதானவர்களுக்கோ குழந்தைகளுக்கோ தொற்று ஏற்படாமல் இருக்க அரசு சொல்லும் நடைமுறைகளைக் கடைபிடிப்போம்.












Click it and Unblock the Notifications