வட சென்னையை கலக்கிய பிரபல ரவுடி.. மனைவி கண் முன்னே ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமா டைப் "ஸ்கெட்ச்"
சென்னை: வட சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடியை அவரது மனைவியின் கண் முன்னே எதிர் கோஷ்டியினரால், ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இவரை கொலை செய்ய எதிர் கோஷ்டி ரவுடிகள் ஸ்கெட்ச் போட்டு வந்த நிலையில், நேற்று இரவு பக்காவாக ப்ளான் செய்து அவரது கதையை முடித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். வட சென்னை பகுதிகளை பரபரப்பாக்கிய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

பிரபல ரவுடி மனோ
வட சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மனோ. பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வழக்குகள் இருந்தபோதிலும், இவருக்கு எதிராக சாட்சி கூற ஒருவரும் முன்வராததால் அவரை போலீஸாரால் கைது செய்ய முடியாமல் இருந்து வந்தது.

கொல்ல துடித்த எதிர்கோஷ்டி
இதனிடையே, மனோவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் திருநாவுக்கரசு, சசிக்குமார் கோஷ்டிக்கும் இடையே யார் பெரிய ரவுடி என்ற போட்டி இருந்து வந்துள்ளது. இந்தப் பகை காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இரு கோஷ்டிகளை சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், மனோவை கொலை செய்ய பல முறை எதிர்கோஷ்டி ஸ்கெட்ச் போட்டும் அதில் இருந்து அவர் தப்பியுள்ளார். எப்போதும் மனோவுடன் 10 பேர் இருப்பதால் அவரை எதிர் கோஷ்டியினரால் நெருங்க முடியாமல் இருந்து வந்துள்ளது.

சினிமா பாணி ஸ்கெட்ச்
இந்நிலையில், மனோவை தனியாக வரவழைக்க திருநாவுக்கரசு கோஷ்டி சில தினங்களுக்கு முன்பு ஸ்கெட்ச் போட்டுள்ளது. அதன்படி, மனோவின் நெருங்கிய உறவுக்காரரான ஆகாஷ் மீது திருநாவுக்கரசின் அடியாட்கள் நேற்று முன்தினம் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த விஷயம் தெரியவந்ததும் அனுதாபத்துடன் மனோ தனது கூட்டாளிகள் இல்லாமல் தனது மனைவியுடன் மட்டும் ஆகாஷை பார்க்க வந்துள்ளார்.

ஓட ஓட விரட்டி கொலை - கைது
இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அங்கு காத்திருந்த திருநாவுக்கரசு கோஷ்டி, மனோவை பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த மனோ, உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடினார். ஆனால், ரவுடிகள் அவரை விடாமல் அவர் மனைவி கண் முன்னே ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து, தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து மனோவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications