“கோடநாடு பங்களா கோவில்” யாராக இருந்தாலும் தண்டிக்கனும்! சசிகலா உருக்க அறிக்கை ! இத கவனிச்சீங்களா?
சென்னை : கோடநாடு பங்களாவை நாங்கள் கோயிலாகதான் பார்த்தோம் எனவும், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டுமென சசிகலா கூறியுள்ளார்.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில்ல் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா தங்கிச் செல்வது வழக்கம். அவரது மறைவுக்குப் பிறகு அங்கு யாரும் செல்வதில்லை.
இந்நிலையில் அந்த 2017 ஆம் ஆண்டு கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்ட நிலையில் , மற்றொரு காவலாளியாக கிருஷ்ணா தாபா என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அங்கிருந்த பொருட்கள் கொள்ளை போயின.

கோடநாடு வழக்கு
இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ், கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் இந்த வழக்கில் பெரும் குழப்பம் உருவானது. இதுதொடர்பாக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் சுமார் 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சசிகலா கோரிக்கை
இந்நிலையில், இந்தக் கொலை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், " கோடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து இருக்கிறேன். முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன்.

கோடநாடு பங்களா கோவில்
கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை, என் அக்கா அவர்கள் மிகவும் நேசித்த இடம், அவர்களுக்கு நிறைய மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் உண்டு என்றால் அது கோடநாடுதான். எங்களை பொருத்தவரையில் கோடநாடு பங்களாவை ஒரு கோயிலாகத்தான் பார்த்தோம். எங்கள் கட்சிக்காரர்களும் அப்படிதான் பார்த்தார்கள்.

விரும்பத்தகாத சம்பவம்
இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில், விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நானும் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி திரு ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு. கொள்ளையும் நடந்துள்ளது. அதோடுமட்டுமல்ல, இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக மரணம் அடைந்துள்ளார்கள் இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவரது தாயும் பலியாகி உள்ளனர்.

உரிய விசாரணை
எனவே, காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த, ஒன்றுமே அறியாத அப்பாவிகளான எங்களது காவலாளி திரு.ஓம் பகதூர், பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை மற்றும் அவரது. தாயார் ஆகியோருடைய மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.", என அந்த அறிக்கையில் கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் இந்த அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் என்றே சசிகலா குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications