தென் மாவட்டங்களில் தேரி அமைப்புகளை சீரழித்துவிடும்.. இந்த திட்டமே வேண்டாம்.. எஸ்டிபிஐ எதிர்ப்பு
தென்மாவட்ட கடற்கரையோர கனிமவளத்தை பிரித்தெடுத்து சந்தைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி உள்ளது.
சென்னை: தென்மாவட்ட கடலோரப் பகுதிகளின் இயற்கை சூழல் அமைவுகளை பாதிப்படையச் செய்யும் என்றும் கடற்கரையோர கனிமவளத்தை பிரித்தெடுத்து சந்தைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த, தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் கனிமவள மணல் காணப்படுகின்றது. இதனை குறிவைத்தே வருவாய்க்காக தமிழக அரசால் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இப்பகுதிகளில் உள்ள கடற்கரை மணலில் கணிசமானவற்றை தனியார் தாது ஆலைகள் உறிஞ்சி எடுத்து விட்ட நிலையில், கடலோர கனிமங்களை பிரித்தெடுத்து அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களாக மேம்படுத்தவும், அணுசக்தித் துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்களுக்காகவும் கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடற்கரை மணலிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இரண்டு தொழிற்சாலைகளை குதிரைமொழி, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் நிறுவி, ஆண்டிற்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் 1075 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த வருவாய்த் திட்டம் சூழல் பாதுகாப்பிற்கு முற்றிலும் எதிரானது. கனிம வள வருவாய்க்காக காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்ட சூழல் முக்கியத்தும் வாய்ந்த தென்மாவட்ட கடலோரப் பகுதிகளின் இயற்கை சூழல் அமைவுகளை பாதிப்படையச் செய்வதோடு, தீவிர கடலரிப்பைச் சந்தித்து வரும் அப்பகுதிகளின் இயற்கையான தேரி அமைப்புகளை சீரழித்துவிடும். ஆகவே, தமிழக அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்து திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications