அன்று கருணாநிதிக்கு.. நேற்று ஸ்டாலினுக்கு.. இன்று உதயநிதிக்கு.. கலக்கும் பெயர் பலகை எழுத்தர் மணி!
சென்னை: கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, என மூன்று தலைமுறைகளுக்கும் பெயர் பலகைகளில் அவர்களது பெயர்களை எழுதி வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார் தலைமைச் செயலக பெயர் பலகை எழுத்தர் மணி.
கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஸ்டாலின் என இதுவரை 5 முதலமைச்சர்களுக்கு பெயர்பலகை எழுதியிருக்கிறார் மணி.
இதனிடையே 1989-ம் ஆண்டு கருணாநிதியால் தலைமைச் செயலக பெயர் பலகை எழுத்தராக நியமிக்கப்பட்ட மணி, இன்று அவரது பேரன் உதயநிதிக்கும் பெயர் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

சட்டமன்றம்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள 2வது மாடியில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறையை உதயநிதிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் கடந்த ஒரு வாரத்தில் தயார் செய்தனர். இதனிடையே உதயநிதியின் அறைக்கு முன்னால் பொருத்த வேண்டிய அமைச்சருக்கான பெயர் பலகையில் சட்டமன்ற பெயர் பலகை எழுத்தர் மணி தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார்.

கலை உணர்வு
இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்ற பெயர் பலகை எழுத்தளராக இருந்து வருகிறார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டால், அவர்கள் பெயரை பெயர் பலைகைகளில் திருத்தி எழுதுவது உள்ளிட்ட பணிகளை மணி கவனித்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையிலும் இதனை பணியாக மட்டும் பார்க்காமல் ஒரு கலையாக அவர் ஆர்வம் எடுத்து செய்து வருகிறார்.

நிகரில்லை
ஓவியர் மணியின் சித்திரமும், அவரது எழுத்துவடிவமும் பிடித்ததன் காரணமாகவே கருணாநிதி அவரை சட்டமன்ற பெயர்பலகை எழுத்தர் பணிக்கு கொண்டு வந்தார் எனக் கூறப்படுகிறது. பலகைகளில் தமிழ் எழுத்துக்களை முறையாக வரைவதில் மணிக்கு நிகர் யாருமில்லை என்பது தலைமைச் செயலக ஊழியர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே மணியின் எழுத்துக்கள் எடப்பாடி பழனிசாமிக்கும் பிடிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்கள்
இன்று காலை முதலே தலைமைச் செயலகத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலின் அறைக்கு முன்னாள் பொருத்தப்பட்டுள்ள அவரது பெயர் பலகை தான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறு பிசிரின்றி நேர்த்தியான முறையில் பெயர் பலகையை உருவாக்கியுள்ளார் மணி.












Click it and Unblock the Notifications