"கிள்ளுற மாதிரி கிள்ளுங்க.. நான் அழுற மாதிரி அழுறேன் ஆட்டம் இது" - உதயநிதி பற்றி சீமான் கிண்டல்!
சென்னை : உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் அமைச்சர் ஆவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தி.மு.கவின் மாவட்ட செயற்குழுக்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின், எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்க கிள்ளுற மாதிரி கிள்ளுங்க.. நான் அழுற மாதிரி அழுறேன் எனும் திட்டம்தான் இது என விமர்சித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று வென்று எம்.எல்.ஏ ஆனார். அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், ஸ்டாலின் இப்போது வேண்டாம் என முடிவெடுத்தார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு உறுதியாக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. திமுக அமைச்சர்கள் பலரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்
இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், திண்டுக்கல் தி.மு.க கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் சார்பாக அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நடந்த செயற்குழுக் கூட்டத்திலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பல மாவட்டங்களின் திமுக செயற்குழு கூட்டங்களில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம்
இதையடுத்து இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டாம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், என் மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம் என உதயநிதி குறிப்பிட்டிருந்தார்.

உதயநிதி அமைச்சர் ஆவார்
இந்நிலையில் இதுகுறித்த செய்தியாளரின் கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துப் பேசுகையில், "நீங்க கிள்ளுற மாதிரி கிள்ளுங்க.. நான் அழுற மாதிரி அழுறேன் எனும் திட்டம்தான் இது. உதயநிதி ஸ்டாலின் உறுதியாக அமைச்சர் ஆவார். 5 ஆண்டு காலத்தில் அமைச்சராகவே ஆகமாட்டேன் என தம்பி உதயநிதி உறுதி சொல்வாரா? எல்லோரும் உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று விரும்பினார்கள், அவர் அமைச்சர் ஆவதற்கு எதிர்ப்பே இல்லை.. ஆதரவுதான் இருக்கிறது எனக் காட்டுவதற்காகவே கட்சியில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்காகத்தான்
மேலும், கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவது குறித்துப் பேசிய சீமான், "என் மீது வழக்கு போட்டது எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு. இப்போது திமுக அரசு அமைந்த பிறகு காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். ஆனால் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. அதே நேரத்தில் கொரோனா காலத்தில் தம்பி உதயநிதி மீதும் நிறைய வழக்குகள் போடப்பட்டது. அவருக்காகத்தான் இந்த வழக்குத் தள்ளுபடி உத்தரவு வந்ததோ என்று நினைக்க வேண்டியுள்ளது. உள்ளபடியே கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யும் என்றால் எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை ஏன் தள்ளுபடி செய்யவில்லை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications