பொங்கல் அன்று வங்கி தேர்வு.. தைப்பூச தினத்தில் ஆதார் சிறப்பு முகாம்? இதென்ன வேலை? - சீமான் ஆவேசம்!
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளுக்கு மாற்ற வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் இன்று (பிப்ரவரி 5) தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளுக்கு மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
சமீபத்தில் தமிழர் திருநாளான பொங்கல் அன்று ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெற்றது. பொங்கலன்று தேர்வு நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், தேர்வர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், திட்டமிட்டபடி பொங்கலன்றே தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தைப்பூசத்தன்று சிறப்பு முகாம்களை நடத்த சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
”முன்பதிவு செயலி தேவை” ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் தைபூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முகாமை வேறொரு தினத்தில் மாற்ற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கலெக்டர்கள் அறிவிப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சியர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முப்பாட்டன் முருகன் தைப்பூச திருவிழா
தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் தைப்பூச திருவிழா தமிழ்நாட்டில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொள்ள முடியாத நிலையே உள்ளது. ஏற்கனவே தமிழர்களின் தனிப்பெரும் தேசியத் திருவிழாவாம் தைப்பொங்கல் நாளன்று வங்கித் தேர்வினை வைத்து தமிழ் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ள முடியாத நெருக்கடியான சூழலை உருவாக்கியது இந்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI).
தேதியை மாற்றுங்கள்
தற்போது, தேர்தல் ஆணையமும் அதுபோன்று ஒரு சூழலை அளித்து நெருக்கடி அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஆகவே, இந்த சிறப்பு முகாமை வேறு ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம் என சீமான் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.