ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு.. தெலுங்கானா போலீசுக்கு மாற்றம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி
சென்னை: லஞ்ச ஒழிப்புதுறை ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலுங்கான காவல் துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி-யாக இருந்த முருகன் மீது பெண் எஸ்பி ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டது. அதேபோல சிபிசிஐடி காவல் துறையினரும் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பெண் எஸ்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லஞ்ச ஒழிப்பு துறை ஐஜிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டார்..
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சிவி கார்த்திகேயன் அமர்வு,
ஐஜிக்கு எதிரான பாலியல் புகார் மற்றும் இதுதொடர்பாக சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்குகளை தெலுங்கான காவல்துறை விசாரிக்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்குகளை விசாரிக்க, பெண் காவல் அதிகாரியை விசாரணை அதிகாரியாக தெலுங்கான டிஜிபி நியமிக்கவும், இந்த விசாரணையை 6 மாத காலத்திற்குள் முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
அதேபோல,இந்த வழக்கை தெலுங்கானா காவல் துறைக்கு மாற்றியதால், தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லை என அர்த்தமாகாது என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக தலைமை செயலாளர் இந்த வழக்கின் ஆவணங்களை உடனடியாக தெலுங்கானா காவல்துறைக்கு வழங்கவும் உத்தரவிட்டனர்.