எனது நேர்மையை கமல் புரிந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது - சூரப்பா
சென்னை: எனது நேர்மையை கமல்ஹாசன் புரிந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என பல்வேறு புகார்கள் அவரை சுற்றியுள்ளன.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும் சூரப்பாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் சூரப்பாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில் சூரப்பா என்ன இன்னொரு நம்பி நாராயணனா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் நேர்மையாக இருந்தால் இதுதான் நிலையா, நேர்மையாக இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நான் கேள்வி கேட்பேன் என ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் தமக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசனுக்கு சூரப்பா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் என்னுடைய நேர்மை, அர்ப்பணிப்பு, கல்வித் துறைக்கான எனது சேவையை கருத்தில் கொண்டு ஆதரவளிப்பது என்பது எனக்கான ஆதரவு அல்ல, இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான ஆதரவு அது.
தமிழ்மீடியத்தில் படித்தவர்களுக்கு.. தமிழக அரசுப் பணியில் 20 % இடஒதுக்கீடு என்னானது? -ஸ்டாலின் கேள்வி
நான் பஞ்சாப ஐஐடி இயக்குநராக பணியாற்றிய போது அப்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஐஐடியில் பஞ்சாப் மாணவர்கள் இடம்பெற என்னென்ன கல்வி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என என்னிடம் ஆலோசனை கேட்பார். ஆனால் தமிழகத்தில் அது போன்று எதுவும் நடக்கவில்லை.
நான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரே உள்ளது. என் மீதான புகார் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் இருந்து எனக்கு சம்மன் வரவில்லை என்று சூரப்பா கூறியுள்ளார்.