108.. தமிழ்நாடு தாங்காது குருநாதா.. பேனை 12ம் நம்பரில் வச்சாலும்.. இன்று சென்னை வானிலைதான் ஹைலைட்!
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மழைமேகம் கூடுகிடுகிறது.கலைந்த வேறு பகுதிக்கு செல்கிறது.இப்படியே கடந்த சில நாட்களாக போக்குகாட்டி வருகிறது. மக்கள் கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மறுபக்கம் போர்வெல்களில் தண்ணீர் இல்லாமல் அவஸ்தை படுகிறார்கள். வெப்ப அலைகளாலும், தண்ணீர் பிரச்சனையாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பதிவு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருந்ததாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 6) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 7, 8, 9-ம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 86 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

ஜூன் 5-ம் தேதி (நேற்று) காலை 8.30மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மற்றும் திருப்பத்தூரில் 4 செ.மீ., திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், அவிநாசி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் வரும் 9-ம் தேதி வரைகுமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ.வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications