11 முக்கிய பாயிண்ட்.. கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க அதிரடியாக உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரிகளில் நடக்கும் ராக்கிங்கை தடுக்க 11 பாயிண்ட்டுகளை குறிப்பிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்தனர். அரைநிர்வாணமாக மாணவர்கள் கல்லூரியை வலம் வந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகின.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் 7 மாணவர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
தமிழகத்தில் ராக்கிங் கொடுமை இல்லாத நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அனைத்து கல்லூரிகளும் ராக்கிங் கொடுமையை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து உள்ளது. ராக்கிங் செய்தால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு உத்தரவுகளை கல்லூரி நிர்வாகங்கள் பிறப்பித்து உள்ளன. இந்நிலையில் தான் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு சுற்றிக்கை மூலம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதில் 11 முக்கிய பாயிண்ட்டுகள் உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உடனடி நடவடிக்கை தேவை
ராக்கிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் திருப்தியடையாத பெற்றோர் மற்றம் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் அல்லது அதன் அருகாமையிலும் முழுநேர விடுதி கண்காணிப்பாளர் தங்கி இருக்க வேண்டும் என்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட அளவில் குழு
கல்வி நிறுவனங்களில் ராக்கிங் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதன்படி மாணவர்கள் இடையே ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க மாவட்ட ராக்கிங் எதிர்ப்பு குழுக்களும் செயல்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
செல்போன் எண் அவசியம்
விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கல்வி நிறுவனங்களின் நிறுவனத்தினருக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அறிவிப்பு பலகைகளிலும் தொலைபேசி, மொபைல், வாட்ஸ்அப் எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்கள்
கல்வி வளாகத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பெறப்பட்ட புகார்களை மன்னுரிமை அடிப்படையில் வசிாரிக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். சட்ட கருத்துகள் பெறுவதில் தாமதம் கூடாது'' என கூறப்பட்டுள்ளது.