தமிழ்நாட்டில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்.. 8ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் மேஜர் முடிவு
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் அக்டோபர் 8ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மதுபானக் கடைகள் தொடர்பாக மிகப்பெரிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். மதுக்கடைகள், போதைப்பொருட்கள் விற்பனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுக்கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாம். இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்பட இருக்கிறதாம்.
கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 நகர்புற உள்ளாட்சி தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் என வரிசையாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வரும் திமுகவிற்கு 2026 சட்டசபை தேர்தல் அவ்வளவு எளிதாக இருக்காது என்கிறார்கள்.. காரணம், நடிகர் விஜய்யின் வருகை.. இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது.. டாஸ்மாக் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை விவகாரம்.

என்னதான் மகளிர் உரிமை தொகை, மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் உதவி தொகை, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவி தொகை என பல திட்டங்களை அறிவித்தாலும், மதுபானங்கள் விற்பனை விவகாரம் பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அரசின் திட்டங்களில் வரும் பணம் எல்லாம் டாஸ்மாக்கிற்கே செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே 2015ம் ஆண்டு அதிமுக சந்தித்த அதே பிரச்சனையை திமுக தேர்தல் நெருங்கும் நேரத்தில் சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மொத்தமாக எல்லா எதிர்க்கட்சிகளும் டாஸ்மாக் மற்றும் மதுபான விவகாரத்தில் திமுகவை கடுமையாக தாக்க தொடங்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளதாம். தற்போதே தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகவும், போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கவும் எதிர்க்கட்சிகள் மட்டும் அல்லாமல், ஆளுங்கட்சி கூட்டணி கட்சிகளே வாயை திறந்து எதிர்க்க ஆரம்பித்துவிட்டன. எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற அக்டோபர் 8-ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற போகிறது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறதாம். குறிப்பாக மேலும் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறதாம். அவ்வாறு முடிவு செய்யப்படும் பட்சத்தில் தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 4,329 ஆக குறைய வாய்ப்பு உள்ளது..
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் 6,828 டாஸ்மாக் கடைகள் இருந்தன. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2 கட்டங்களாக ஆயிரம் மதுக்கடைகள் குறைக்கப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் 500 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதுபோக பொதுமக்கள் எதிர்ப்பு, நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக சுமார் 300 முதல் 400 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் மட்டுமே உள்ளன. இதுதவிர ஒவ்வொரு பெரிய ஊரிலும் தனியாருக்கு மனமகிழ் மன்றங்கள் (எப்.எல்.-2), ஓட்டல்களுடன் கூடிய பார் (எப்.எல்.-3), 3 நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்கள் (எப்.எல்.-4), 5 நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்கள் (எப்.எல்.-5, எப்.எல்.-6) என மதுபான விநியோகிக்கும் கடைகள் உள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் 448 மனமகிழ் மன்றங்களும், 793 இடங்களில் ஓட்டல்களுடன் கூடிய பார்களும் உள்ளன. புதிதாக 300 மனமகிழ் மன்றங்களுக்கும், 150 ஓட்டல்களுடன் கூடிய பார்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் சுமார் 400 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே, ரயில் நிலையங்கள் ஓரம் உள்ள மதுக்கடைகளை மூடும்படி தெற்கு ரயில்வே நிர்வாகம் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. இதுதவிர தி.மு.க.வின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாநாடே நடத்தி உள்ளார். இதேபோல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். எதிர்க்கட்சிகள் எல்லாமே மதுக்கடை விவகாரத்தில் குரல் எழுப்பி வரும்நிலையில், மேலும் 500 கடைகளை மூட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர, தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications