பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதும் - இலவசமாக பயணிக்கலாம்... அமைச்சர் அறிவிப்பு
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை: பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்லும் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால் 18 லட்சம் மாணவர்கள் 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு செல்ல உள்ளனர்.
Recommended Video

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக நாளை முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிடக்கூடாது, விளையாட்டு பிரிவு கிடையாது, மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பழக வேண்டும். கட்டாயம் மாஸ்க், கிளவுஸ் அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விதித்துள்ள கட்டுபாடுகள் நல்ல விஷயமாக இருந்தாலும், மாணவர்கள் அதனை கடைபிடிப்பார்களா என்பது சந்தேகம் தான் என ஆசிரியர்கள் கூறுகின்றனர். பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
பள்ளிகளுக்கு அரசு பேருந்தில் செல்லும் மாணவர்கள் சீருடை அணிந்து பழைய பஸ் பாஸ் கொண்டு செல்ல வேண்டும், தனியார் பள்ளி மாணவர்கள் பழைய ஐடி கார்டு பயன்படுத்தி பயணம் செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications