தை திருநாளில்...குடும்பங்களில் மகிழ்ச்சி, செழிப்பு நிலவட்டும்... தமிழக தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
அறுவடையின் திருநாளான பொங்கல் நம் குடும்பங்களிடையே மகிழ்ச்சி, செழிப்பை திரளாக கொண்டு வருகிறது என பன்வாரிலால் புரோகித் கூறினார்.
இதேபோல் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூகத்தில் அன்பு, ஆரோக்கியம் மலரட்டும்... ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து!
பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டுவர விரும்புகிறேன். தமிழர் வழியில் செழுமை நிலையை இனி வரும் நாட்களிலும் உயர்த்திப்பிடித்து சிறந்து வாழ்த்திட முன்வருவோம். அறுவடையின் திருநாளான பொங்கல் நம் குடும்பங்களிடையே மகிழ்ச்சி, செழிப்பை திரளாக கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறுகையில், தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த இனிய தை பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும். மக்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாட்டில் நலமும், வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
தொல். திருமாவளவன்
வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன்:- என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள். விவசாயம்,விவசாயிகள்,விவசாயக்கூலித் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்துவோம்.
வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்:- 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் பொங்கல் திருநாளான இன்றிலிருந்தாவது எதிர்வரும் காலங்களில் தமிழக மக்களின் துயரங்கள் நீங்கி வாழ வேண்டும். தமிழர்களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் தமிழகத்திலும், ஈழத்திலும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரத்குமார்
ச.ம.க. தலைவர் சரத்குமார்:- இயற்கையை வணங்கிய தமிழனின் தொன்மையான வரலாற்றை போற்றி நமது கலாசாரமும், நாகரிகமும் என்றும் தொடர, தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளிலே உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், உழவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.எச்.ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா:- தமிழர் திருநாளான தைப்பொங்கல் நன்னாளைக் கொண்டாடும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எமது அகங்கனிந்த நல்வாழ்த்துகள். தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் அனைத்து மக்களின் மீதும் அன்பைப் பொழிந்திடும் அக மனப்பான்மையை வளர்த்திட உறுதியேற்போம்.
தைப்பொங்கல் என்பதே அறுவடைத் திருநாளாகும். அந்நாளில் உழவர்களுக்கு உலகம் நன்றி கூறும் நன்மரபைத் தமிழகம் பேணி வந்துள்ளது. நாட்டின் தலைநகரில் இலட்சக்கணக்கான உழவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் உழவர் திருநாளான தமிழர் திருநாளில் அனைவரும் விவசாயிகளுடன் நின்று அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்.
வைகோ
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ:- உயிர்களை வாழ வைக்கும் உணவு தானியங்களைத் தன் மேனி சிந்திய வியர்வைத் துளிகளால் விளைவித்துத் தரும் வேளாண் பெருங்குடி மக்கள், தாம் தாயாகப் போற்றும் நிலத்துக்கும், கால்நடைச் செல்வங்களுக்கும், நன்றி காட்டும் உன்னதப் பெருவிழாதான் தைப்பொங்கல் திருவிழா ஆகும். இதுவே தமிழர்களின் புத்தாண்டின் முதல் நாளும் ஆகும். இருள் விலகி தமிழகத்திற்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்ப் பெரும் மக்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழ.நெடுமாறன்
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்:- தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக மக்கள் அனைவரும் மீட்சி பெறவும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை வாட்டி வதைத்து வரும் ஈழத்தமிழர் பிரச்னையில் விடிவு ஏற்படவும் தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சியும் மகிழ்ச்சியும் பொங்கி வழியுமாக! என வாழ்த்துகிறேன்.