பொருளாதார ஆலோசனை குழு அமைத்தது எதற்கு தெரியுமா? ஸ்டாலின் அதிரடி பேச்சு
சென்னை: தெற்காசியாவிலேயே தொழிற்சாலை மிகுந்த மிகுந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீபெரும்புதூர் ஹுன்டாய் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ளது ஹூண்டாய் நிறுவனம். 1996 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 25 ஆண்டுகளில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிறுவனத்தில் 27 வகையான கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

25 வருட கம்பெனி
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் ஒரு கோடி உற்பத்தியை உறுதி செய்யும் வாகனம் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதையடுத்து அக்காரின் முன்புற மேற்பரப்பு பகுதியில் வாழ்த்துகள் என எழுதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

நலத்திட்டங்களுக்கு உதவி
அதனையடுத்து தொழிற்சாலையின் ஆராய்ச்சி நிலையத்தில் அதி நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி மின்சார காரினை பார்வையிட்ட முதல்வர் தொழிற்சாலையில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நட்டு வைத்தார். அதன்பின்னர் ஹூண்டாய் தொழிற்சாலையின் சமூக பங்களிப்பு திட்ட நிதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பின் தங்கிய மக்களுக்கு 200 கறவை பசு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர், பின்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு 5 செரிவூட்டி கருவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தியிடம் ஹூண்டாய் நிருவனம் சார்பில் வழங்கினார்.

ரூ.5 கோடி நிவாரண உதவி
ஹூண்டாய் நிறுவனம் சார்பில் வல்லக்கோட்டை ஊராட்சி பகுதி சுய உதவி குழு பெண்களுக்கான நடமாடும் உணவக வாகனத்தை வழங்கியும், காட்ரம்பாக்கம் ஊராட்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தினையும் அவர் திறந்து வைத்தார். ஹூண்டாய் சார்பில் முன்னதாக, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.

கருணாநிதி சாதனை
இந்த நிகழ்ச்சியில், பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், 1996 ஆம் ஆண்டு முன்பு சென்னையிலிருந்து பூந்தமல்லியை கடந்து சென்றால் நகரம் முடிந்து விடும். பூந்தமல்லியை கடந்து செல்லும் பொழுது இருபுறமும் தொழிற்சாலைக்காக இருப்பதற்கு காரணம் தலைவர் கருணாநிதிதான்.
இந்த நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை உலக வரைபடத்தில் மிகப்பெரிய உற்பத்தி மண்டலமாக மாற்றியதில் மிகப்பெரிய பங்கு கொண்ட நிறுவனம்.

தொழிற்சாலை மிகுந்த மாநிலம்
தெற்காசியாவிலேயே தொழிற்சாலை மிகுந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றம் வேண்டும். அதற்கான அடிப்படை திட்டமிடுதலை தொடங்கி இருக்கிறோம். இதற்காக, உலகப் புகழ் பெற்ற பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில் துவங்க வருவோருக்கு, இது நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இந்தக் குழு ஆலோசனை பெற்று தமிழக அரசு செயல்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, எஸ்.நாராயண் மற்றும் ஜீன் டிரெஸ் ஆகிய, ஐந்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.

அமைச்சர்கள் பங்கேற்பு
இந்நிகழ்வில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நல மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி எழிலரசன், செல்வப்பெருந்தகை, ஹூண்டாய் நிர்வாக அதிகாரிகள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications