சென்னை உயர் நீதிமன்றத்தில்.. வழக்காடும் மொழியாக தமிழ்.. மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் நிச்சயம் இடம்பெறும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி அளித்தார்.
மேலும், அந்தந்த மாநில மொழிகள் நீதிமன்றங்களில் வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக மாற வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் தான் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசு இந்தி மொழியை திணித்து வருவதாக பெரும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், கிரண் ரிஜிஜுவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மன உளைச்சலா இருக்கு.. கஷ்டமா இருக்கு.. கோர்ட்டுக்கு போன எடப்பாடி.. உயர் நீதிமன்றம் தந்த குட்நியூஸ்
பாஜகவும்.. தமிழும்..
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதலாக, தான் எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் பெருமைகள் குறித்தும், திருக்குறளின் அவசியம் குறித்தும் பேசுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். எனினும், இதை அவர் அரசியலுக்காக மட்டுமே செய்து வருவதாக திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தெரிவிக்கின்றன. தமிழ் மீது அத்தனை அன்பு இருந்தால் திருக்குறளை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இந்தி திணிப்பு நடவடிக்கையில் ஏன் ஏற்படுகிறது எனவும் அவை கேள்வியெழுப்புகின்றன.
பிராந்திய மொழிகள் அவசியம்
இது ஒருபுறம் இருக்க, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நீதித்துறையை பொதுமக்கள் எளிதாக அணுகுவதற்கு பிராந்திய மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருப்பது மிகவும் அவசியம்.
பிரதமர் மோடி உறுதி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நமது பண்பாடு மற்றும் பிராந்திய மொழிகளின் உதவியுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளும், அலுவல்களும், வழக்காடுதலும் அந்தந்த பிராந்திய மொழிகளில் இருக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் நான் பேசியுள்ளேன்.
"தமிழ் விரைவில் வழக்காடு மொழி"
வழக்கை தொடுப்பவர்களுக்கும், வழக்கை எதிர்கொள்பவர்களுக்கும் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது புரிய வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை உயர் நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ் விரைவில் வழக்காடு மொழியாக மாறும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். இவ்வாறு கிரண் ரிஜிஜு பேசினார்.