டாஸ்மாக் வருமான சர்ச்சை...அமைச்சர் செந்தில் பாலாஜியை 'சாராய அமைச்சர்' என விமர்சித்த பாஜக அண்ணாமலை!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான விற்பனை தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட்டால் ஊடகங்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீபாவாளி பண்டிகை உள்ளிட்ட விழா காலங்களில் டாஸ்மாக் மதுவிற்பனைக்கான இலக்கு மற்று விற்பனை தொடர்பாக ஊடகங்கள் பல ஆண்டுகளாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த ஆண்டும் அதேபோல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. நடப்பாண்டிலும் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தமிழக அரசு தரப்பு மறுத்தது.
கோவை சிலிண்டர் வெடிப்பு.. வெளிநாட்டு சதி.. ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு! தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம்
அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
இந்நிலையில் தீபாவளி பண்டிகை கால 3 நாட்களில் டாஸ்மாக் வருமானம் ரூ700 கோடியை தாண்டியதாக சில ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் செய்திகள் வெளியிட்டன. இதனை ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்திருந்தார். மேலும் தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் 'விற்பனை விவரம்' என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தந்தி டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சாராய அமைச்சர் என விமர்சனம்
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது: கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?
பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு
சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்? கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு தொடுப்பீர்களா? அவர்கள் மீது வழக்கு தொடுத்தாலும், உங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக @BJP4TamilNadu குரல் கொடுக்கும்.
தன்னிச்சையாக செயல்படுமா?
பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள்.சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை @CMOTamilnadu வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா?. இவ்வாறு அண்ணாமலை கூறியிருந்தார்.