இனி கல்லூரி பேராசிரியர்களுக்கும் வந்துவிட்டது ஆடைக் கட்டுப்பாடு.. தமிழக உயர்கல்வித்துறை அதிரடி
சென்னை: பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு இருப்பது போல இனி கல்லூரி பேராசிரியர்களுக்கும் ஆடைக் கட்டுப்பாட்டு நடைமுறையை தமிழக உயர்கல்வித்துறை அதிரடியாக கொண்டு வந்துள்ளது.
சமீபகாலமாக, ஆசிரியர் - மாணவர் இடையேயான உறவு அபத்தமாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அதிரடி நடவடிக்கையை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் கல்லூரி பேராசிரியர்கள் கண்ணியமாக உடை அணிவது உறுதிப்படுத்தப்படும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொச்சையாகும் ஆசிரியர் - மாணவர் உறவு..
தமிழகத்தில் அண்மைக்காலமாக ஆசிரியர் - மாணவர் உறவு என்பது அதற்குரிய வரம்பை மீறி சென்று கொண்டிருந்தது. மிகவும் புனிதமாக பார்க்கப்படும் இந்த உறவை கொச்சைப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்த அவலத்தை பார்க்க முடிந்தது. மாணவியுடன் ஓடிச் சென்ற பேராசிரியர், மாணவனை திருமணம் செய்த ஆசிரியை என மிகவும் அருவருக்கதக்க செயல்கள் அன்றாடம் செய்தித் தாள்களில் இடம்பிடித்தன.

உடையால் சபலம்..
இதுதொடர்பாக கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில், பேராசிரியர்கள் (பேராசிரியைகளும் அடங்குவர்) உடைகள் மாணவ - மாணவிகளின் மனதில் நெருடலை ஏற்படுத்துவது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கல்லூரி பேராசிரியர்களின் உடையில் கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து கடந்த சில தினங்களாக தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகள் உயர்மட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலாடை கட்டாயம்..
இதுகுறித்து உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "அனைத்துக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் தங்களை மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும்.

உடலமைப்பை வெளிக்காட்ட கூடாது..
பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு அந்த மேலங்கியை அணிய வேண்டும். இந்த உத்தரவை உடனடியாக அனைத்துக் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்கல்வித்துறையின் இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுபோலவே, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications