தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் ஏற்பாடுகள் எப்படியிருக்கு.. மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
சென்னை: உள்ளாட்சித் தேர்தலின் தயார் நிலை குறித்தும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
தேர்தலின்போது வேட்பாளர்கள் பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வெ பழனிகுமார் தலைமையில் 9 மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்கள், ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் அவர் காணொலி காட்சி மூலம் நேற்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
உள்ளாட்சி தேர்தலில் செம்ம ஷாக்... கொத்து கொத்தாக அதிமுகவுக்கு தாவிய பா.ம.க. மாநில நிர்வாகிகள்!
தற்போது வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை தமிழக மாநில தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை உறுதி செய்வது, பூத்தில் தேர்தல் அதிகாரிகள் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்வது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது, தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவது, பதற்றமான பிரச்சினைக்குரிய வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பது, வாக்கு எண்ணிக்கை மையங்களை அமைப்பது, தேர்தலில் வாக்கு பதிவு இயந்திரங்களின் வருகை, வாக்குப் பதிவு, உள்ளிட்ட நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்வது, பறக்கும் படைகளை நியமிப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதித்தோம்.
அது போல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்களை தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம். 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிப்பது குறித்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் அச்சிடுவது குறித்தும் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.