டாஸ்மாக் திறக்கப்படுமா.. புதுசிக்கல்.. "இதை செய்துவிட்டு கடையை திறங்க".. முதல்வருக்கு பறந்த கோரிக்கை
டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது
சென்னை: டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கும் நிலையில், முதல்வர் முக ஸ்டாலினுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.. அதனால், வரும் 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
Recommended Video
எனவே, தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்..!
லாக்டவுன் ஜூன் 21 வரை நீட்டிப்பு.. டாஸ்மாக் இயங்க அனுமதி.. என்னென்ன தளர்வு அறிவிப்பு.. முழு லிஸ்ட்!
நோய்த்தொற்று
இதனுடன் சில புதிய தளர்வுகள் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.. மேலும், நோய்த்தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... இந்நிலையில் தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
மதுபானங்கள்
அதில், "கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மே மாதம் 10-ம் தேதி முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்பிறகான காலகட்டத்தில் மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் சட்டவிரோதமாக அதிக விலை வைத்து விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இந்த குற்றங்களை பணியாளர்கள் மீது சுமத்தி உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பணி நியமனம்
எனவே டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பு, மூடப்பட்ட நாளில் தணிக்கை செய்யப்பட்டபடி, மது வகைகள் சரியாக இருக்கின்றனவா என்று சரிபார்க்க வேண்டும். அதன்பின்னரே கடைகள் திறக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசின் பிற துறைகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளது.
டாக்டர் ராமதாஸ்
டாஸ்மாக் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதற்கு, டாக்டர் ராமதாஸ் முதல் எல்.முருகன் வரை கண்டனம் தெரிவித்துள்ளனர்.. வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாட்களாகப் படிப்படியாகச் சரிந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் மதுக்கடைகளை திறப்பது வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
"கொரோனா 3-ம் அலை வரும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மறுபடியும் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.,எனவே திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களிடம் சொல்வது ஒன்று, ஆட்சி வந்த பின்பு சொல்வது வேறொன்றாக உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது" என்று எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
எதிர்பார்ப்பு
இப்படி ஆதரவும், எதிர்ப்புமாக இருக்கும் சூழலில், டாஸ்மாக்கை திறப்பதாக இருந்தால், இதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருப்பது,எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது.