ஸ்கெட்ச் திமுகவுக்கு இல்ல! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரித்த ‘மாஜிக்கள்’! அப்செட்டில் ஓபிஎஸ் & கோ?
சென்னை : அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தாலும் நேற்று மற்றும் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துதான் போராட்டங்கள் நடைபெற்றது ஓபிஎஸ் தரப்பை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். அதிரடி பேட்டிகள் அறிக்கைகள் என நாளுக்கு நாள் விவகாரம் சூடு பிடித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். மேலும் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஒன்றாக இருந்தபோது பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு இருந்தாலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின் நடைபெறும் முதல் போராட்டம் இதுவாகும். ஏற்கனவே தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட அளவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இருப்பதால் தனது தலைமை மற்றும் அதிமுகவில் தனக்குள்ள செல்வாக்கினை நிரூபிக்க அதிமுகவின் இந்த போராட்டமானது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுகிறது.

முதல் முறை
மொத்தம் மூன்று கட்டங்களாக இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ள ஆறு மாவட்டங்களை தவிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று கன்னியாகுமரி, தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது நாளை சென்னையில் மொத்தம் உள்ள 10 அமைப்பு மாவட்டங்களையும் சேர்த்து எடப்பாடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒரே போராட்டத்தை மூன்று கட்டங்களாக நடத்துவதும் ஜெயலிதாவுக்கு பிறகு இதுதான் முதல் முறை.

திமுகவுக்கு எதிரான பேச்சு
நேற்று சுமார் 50 அதிமுக அமைப்பு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் வழக்கம் போலவே தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது பேச்சு நடையை விலைவாசி உயர்வு நீட் தேர்வு வரத்து ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு குறித்து பேசினர். ஆனால் ஒரு மணி நேரம் பேசி இருந்தால் அதில் 15 நிமிடங்கள் மட்டுமே திமுகவுக்கு எதிரான பேச்சாக அமைந்திருந்தது.

ஓபிஎஸ் துரோகி
வரவேற்புரை நன்றியுரை போக கூட்டம் முழுவதும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான கடும் விமர்சனங்களும் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய புகழாரங்களுமே நிறைந்து இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் படிப்படியாக தனது செல்வாக்கினை இழந்த ஓபிஎஸ்ஐ துரோகி உள்ளிட்ட கடுமையான வார்த்தைகளால் முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் தற்போது தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கமே திரண்டு இருக்கின்றனர் என்பதை பறைசாற்றும் விதமாகவே தொண்டர்கள் கூடியிருக்கிறார்கள் என கடுமையாக தாக்கி பேசினர்.

கடும் அதிருப்தி
சில மாவட்டங்களில் மட்டும் தொண்டர்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் சொல்லப்போனால் கூட்டம் அதிகமாகவே இருந்தது பெண் தொண்டர்களை விட ஆண் தொண்டர்களின் எண்ணிக்கையும் கூடுதலாகவே இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் திமுகவை விட தன்னை தான் அதிகம் விமர்சித்தார்கள் என்பதனை கேள்விப்பட்ட ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications