வெங்கடாச்சலம் தற்கொலையில் எந்த சந்தேகமும் இல்லை: காவல் ஆணையர் பேட்டி
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலையில் இதுவரை எந்த சந்தேகமும் இல்லை, அவரது பிரேத பரிசோதனை அறிக்கை, செல்போன் ஆய்வு முடிவுகளுக்கு பின்னரே எதையும் சொல்ல முடியும், லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பவில்லை, மிரட்டல் எதுவும் இல்லை என காவல் ஆணையர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரும் ஐஎஃப் எஸ் அதிகாரியுமான வெங்கடாச்சலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் சிக்கினார். இதில் பணம், நகைகள் சிக்கியது. வெங்கடாச்சலத்திற்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இருவருமே மருத்துவர்கள். மகன் தனியாக பிரிந்துச் சென்று வசிக்கிறார். மகள் வெளிநாட்டில் உள்ளார். மனைவியுடன் வசித்து வந்த வெங்கடாச்சலத்துக்கும் மனைவிக்கும் ரெய்டு விவகாரத்துக்குப் பின் அவ்வப்போது சிறு சச்சரவுகள் தோன்றியதாக கூறப்படுகிறது.
அதிமுக சிபிஐ விசாரணை கோரி புகார்
ரெய்டுக்குப்பின் ஏற்பட்ட அவமானம், சொந்தங்களினால் ஏற்பட்ட மன உளைச்சல் வாட்டி வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் வெங்கடாச்சலம். அவரது மரணத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நெருக்கடியே காரணம், அவரைபோன்ற அதிகாரிகளுக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது. வெங்கடாச்சலம் மரணத்தை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்திருந்தார்.
காவல் ஆணையர் பேட்டி
வெங்கடாச்சலம் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மிரட்டப்பட்டாரா என்பதை அறிய அவரது செல்போனை சைபர் பிரிவு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் வேறு திசையில் செல்வதை அடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதுகுறித்து பேட்டி அளித்தார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
தற்கொலைக்கு முன் என்ன நடந்தது
" மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை மரணம் 2 ஆம் தேதி நடந்துள்ளது. அன்று மதியம் 12 மணிக்கு மேல் உணவருந்தியுள்ளார். வெளியில் வராததால் 3 மணிக்கு அவரது மனைவி அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். கதவை திறக்காததால் ஆட்களை வரவழைத்து 4 மணிக்கு கதவை உடைத்து உள்ளேச்சென்று பார்த்தபோது உள்ளே தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.
சந்தேக மரணமாக வழக்குப்பதிவு
174 சிஆர்பிசி கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதுவரை வெங்கடாசலம் தற்கொலையில் இதுவரை கிடைத்த வாக்குமூலப்படி அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. கைப்பற்றப்பட்ட அவரது செல்போன் , டேப் தொடர்பாக தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். உடற் கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு தேவைப்பட்டால் கூடுதலாக சட்டப் பிரிவுகளை சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும். விசாரணையில் கிடைக்கும் தகவலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மிரட்டவில்லை
விஜிலென்ஸ் சார்பாக வெங்கடாசலத்திற்கு சம்மன் அனுப்பியதாக எங்களது தரப்பில் எந்த தகவலும் இல்லை. அவருக்கு சம்மன் அனுப்பியதாக எந்த தகவலும் இல்லை. எப்போது விசாரணைக்கு வர முடியும் என்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் பேசியுள்ளனர் என்றே தெரியவந்துள்ளது. மிரட்டல் என்று எந்த தகவலும் இல்லை.
அவர் மனைவி புகார் அளித்துள்ளார், அதை அவர் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்துள்ளோம். அதில் அவர் சந்தேகம் இருக்கிறது என்று எதுவும் புகார் அளிக்கவில்லை.
நல்லம்ம நாயுடு வீட்டில் திருட்டு
மறைந்த முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம நாயுடு வீட்டை உடைத்து 7 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது " என்று கூறினார். 2, 3 நாட்களாக வீட்டில் யாரும் இல்லை. ஒருவர் தினமும் லைட் போடுவார் , வீட்டில் நகை பணம், வைர நகைகள், ரொக்கப்பணம் திருடு போயுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அதிமுக அலுவலகம் உட்பட பொது இடத்தில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் , சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் , காவல்முறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நேற்று ஒரு புகார் வந்தது , அந்த புகாரில் வழக்கு பதிவு செய்துள்ளோம்.