மனுதர்மம் விவகாரம்... திருமாவளவனும் மு.க.ஸ்டாலினும் அரசியலில் சாதித்தவை ஆயிரம்... சமூகத்தில்?
சென்னை: மனுதர்மம் தொடர்பான பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அரசியல் ரீதியாக நிச்சயமாக அடேங்கப்பா என்கிற வகையில் அசாத்தியமாகவே ஸ்கோர் செய்து எதிரிகளை வாயடைக்க செய்துவிட்டனர். ஆனால் இந்த அரசியல் வெற்றி என்பது திருமாவளவனின் இலக்கான ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலையில் எத்தகைய தாக்கத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது விவாதத்துக்குரியதாக இருக்கிறது என்கின்றனர் சமூகவியலாளர்கள்.
ஜாதிய கட்டமைப்பின் மூலமாக பூர்வோத்திரமாக இருக்கக் கூடியது மனுதர்மம்; இது புனிதமானது அல்ல; எரிக்கப்பட வேண்டியது என்பது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தந்தை பெரியாராலும் அண்ணல் அம்பேத்கராலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள். இந்த நூற்றாண்டிலும் இந்த போராட்டங்கள் தொடருகின்றன.
இந்த சமூகத்தில் ஜாதிய கட்டமைப்பு என்பது தந்தை பெரியார் காலத்தில் கொண்டிருந்த இறுக்கத்தை இப்போது சற்றே தளர்வடையச் செய்திருக்கிறது என்பது யதார்த்தம். இதற்கு ஒற்றை உதாரணமாக சொல்ல வேண்டும் எனில் ஜாதிய பட்டங்களை பெயருக்குப் பின்னால் போடுவதை அவமானமாக கருதுகிற யதார்த்த சூழல் தமிழ்நிலத்தில் மட்டும்தான் இருக்கிறது. இது திராவிடர் இயக்கம் சாதித்த மிகப் பெரிய கட்டுடைப்பு அல்லது ஜாதிய கட்டமைப்பை ஆட்டுவித்த ஒன்று.
தமிழ்நாடு விடுதலைப் படை தலைவர் தமிழரசனின் தாயார் மறைவு: வேல்முருகன், திருமாவளவன் இரங்கல்
சனாதானிகள்- திராவிடர் எதிர்ப்பு
ஆனாலும் ஜாதிய முறை என்பது நீடிக்கிறது; கிராமங்களில் அப்பட்டமாக சமூக ஏற்றத் தாழ்வு நீடிக்கிறது; ஆதிக்க ஜாதியினருக்கு சேவகம் செய்தாக வேண்டிய காணி முறைகளில் இருந்து இன்னமும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் விடுவிக்கப்படவில்லை. இன்னொரு பக்கம் திராவிடர் இயக்கமும் அதனது ஆட்சிகளும் தமிழகத்தில் ஏற்படுத்திய ஒவ்வொரு சிறு சிறு நகர்வும் ஜாதியத்தின் ஒவ்வொரு கண்ணியையும் துண்டாக்கிக் கொண்டே வந்தது. இதனால்தான் சனாதானிகள் திராவிடத்தை கண்டு அஞ்சுகிறார்கள். இதனை உணராதவர்கள் சனாதானிகளுடன் சேர்ந்து கொண்டு திராவிடத்துக்கு எதிராக கூப்பாடு போடுகின்றனர்.
பெண்களும் மனுதர்மமும்
இந்த சமூக, அரசியல் பின்னணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நடத்திய மனுதர்ம எதிர்ப்பு கிளர்ச்சியை அணுகலாம். இரண்டு வகையில் மனுதர்ம எதிர்ப்பு போராட்டம் சாதகங்களை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. பெண்களை மனுதர்மம் எப்படியெல்லாம் ஒடுக்கி வைத்திருக்கிறது என்பதை வீதிக்கு வீதி அப்பட்டமாக அம்பலப்படுத்தி இருக்கிறது. இது மிகப் பெரிய சமூக ரீதியான தாக்கம்.
அரசியல் வெற்றி
இன்னொன்று அரசியல் ரீதியாக திருமாவளவன் சாதித்திருக்கிறார். திருமாவளவனின் போராட்டத்தின் மூலம் திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்- திமுக கூட்டணியை உடைக்கலாம்- ஸ்டாலின் முதல்வராவதை தடுக்கலாம் என எதிர்தரப்பு கணக்குப் போட்டது. ஆனால் திருமாவளவன் இதற்கு பின்வாங்காமல் மனுதர்மத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்க்குரல் எழுப்பினார். இந்த நியாயக் குரலை தட்டிக் கழிக்க முடியாத திமுக தலைமை, பெரியாரும் அம்பேத்கரும் சொன்னதைத்தானே சொல்கிறார் என பொட்டில் அடித்தாற் போல் சொன்னது. இதனையடுத்து இந்த நெருக்கடியான சூழலிலும் திமுக தம்மை கைவிடவில்லை; திமுக கூட்டணியில் தொடர்ந்து விசிக நீடிக்கிறது என்கிற மறைமுக உத்தரவாதம் திருமாவளவனுக்கு கிடைத்திருக்கிறது. இது அரசியல்ரீதியான தாக்கம்.
ஸ்டாலின் வியூகம்
இந்த பிரச்சனையில் மவுனம் காத்து மேலும் மேலும் சிக்கலாக்கி ஊதிப் பெரிதாக்கவிடாமல் போகிற போக்கில் பெரியாரும் அம்பேத்கரும் சொன்னதைத்தான் சொல்கிறார்கள் என ஜஸ்ட் லைக் தட் என ஸ்டாலின் அடித்தது சிக்சர் ரகம்தான். சந்தேகம் இல்லை. இப்படி திருமாவளவனும் ஸ்டாலினும் அரசியல் ஆடுகளத்தில் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசிவிட்டார்கள். ஆனால் திருமாவளவன் பின் நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
சாத்தியமாகி இருக்கலாமோ?
அன்று ஒட்டுமொத்த மக்களையும் சூத்திரர்களாக்குகிறது பஞ்சமர்களாக்குகிறது பெண்களை அடிமைகளாக்குகிறது என்பதற்காக திராவிடர் இயக்கம் மனுதர்மத்தை கொளுத்தியது. 30 ஆண்டுகாலமாக அரசியல் களத்தில் நிற்கும் தலித்தியம்- திருமாவளவனின் விசிக போன்றவை, பஞ்சமர்களை இழிபிறவிகளாக எழுதி வைத்திருக்கும் மனுதர்மம், அதன்சார்ந்த புனித பிம்பங்கள் ஆகியவற்றை ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி கொளுத்த வைத்து இருக்கலாமே என்பது ஒரு கேள்வி. கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என விதிக்கப்பட்டிருக்கும் பிற ஜாதியினருக்கான சேவகம் செய்யும் முறை போன்றவற்றின் மீது கொடுந்தாக்குதல்களை இதேவேகத்துடன் முன்னெடுத்திருந்தால் கலகத்தினூடே சமூக விடுதலை பயணம் சாத்தியப்பட்டிருக்கலாம் அல்லவா என்பது இன்னொரு கேள்வி!
சாதித்தது இதுதானா?
இந்தியாவில் தேர்தல் அரசியல் என்பதே ஜாதியத்தை ஒவ்வொரு தேர்தலின் போது புத்துருவாக்கம் செய்து கொண்டே இருக்கிறது என்பதுதான் யதார்த்தம். ஒழிக்கப்பட்டிருக்க வேண்டிய ஜாதியத்தை சாகும் நிலையில் காப்பாற்றிவிடுகிற மருந்தாகவே ஜனநாயகத்தின் சோ கால்ட் திருவிழாக்களான தேர்தல்கள் அமைந்துவிடுகின்றன. இந்த தேர்தல்கள் மூலம் 30 ஆண்டுகாலமாக அடைந்த அதிகாரம் என்பது அதிகபட்சம் விசிகவுக்கு 2 எம்.பிக்கள் என்பது மட்டும்தானே.. ஒருவேளை விசிக தமது தொடக்கப் புள்ளியில் அதாவது தேர்தல் அரசியலுக்கே வராமலே இருந்திருந்தால் இப்போதைய பெண் விடுதலைக்கான மனுதர்ம கிளர்ச்சிகள் அன்று பஞ்சமர்களின் மீதான இழிவுகளை போக்கவும் நிகழ்ந்திருக்கலாம் அல்லவா?
வேடிக்கையும் வேதனையும்
இதில் வேடிக்கையானதும் வேதனைக்குரியதும் ஜாதியத்தை ஒழிக்க முன்னெடுக்கும் மனுதர்ம எரிப்பு போன்ற போராட்டங்கள், ஜாதியத்தை காப்பாற்றுகிற தேர்தல் அரசியல் கள வெற்றிகளுக்குப் பயன்பட்டுவிடுகிறது என்பதும்தான்! இதுதான் இப்போது திருமாவளவனின் மனுதர்ம எதிர்ப்பு போராட்டத்தில் நடந்திருக்கிறது.