"அது" மட்டும் நடந்திருந்தால் ஹெச்.ராஜா தமிழக முதல்வராகியிருப்பார் - திருமா சுளீர்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குறித்து திருமாவளவன் பேசியுள்ளார்.
சென்னை: "யோசிச்சு பாருங்க.. இந்த முறை அதிமுக மட்டும் தப்பித்தவறி வெற்றி பெற்றிருந்தால், இன்னைக்கு நமக்கு முதல்வர் எச்.ராஜா தான்" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் இசுலாமியர்கள் மீதும் பாஜகவினர் நடத்திய வன்முறையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமல்லாது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் கலந்துகொண்டன.
டீம் இருந்தும்.. சுயமாக களமிறங்கிய முதல்வர்.. கொங்கில் டாப் கியரில் திமுக.. ஆடும் அதிமுக அஸ்திவாரம்?
திருமாவளவன்
அப்போது விசிக தலைவர் திருமாவளவன், உள்ளாட்சி தேர்தலுக்கான வன்முறை திரிபுராவில் நடப்பதாகவும், சங்பரிவார், பாஜக குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.. கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்த பாஜகவினர் தற்போது இசுலாமியர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்றும் விமர்சித்தார்.. அப்போது தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பற்றியும் தன் பேச்சில் திருமாவளவன் குறிப்பிட்டார்.. அதன் சுருக்கம்தான் இது:
ஆட்சி அதிகாரம்
"இந்து என்ற உணர்வை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவதன்மூலம் ஆட்சியை கைப்பற்ற முடியும், இந்த அரசியலமைப்பை தூக்கி எறிந்துவிட முடியும் என்பதே பாஜகவின் கனவு.. ஆட்சிக்கு வருவதும், நம்மை போல கொஞ்ச நாள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதல்ல பாஜகவின் கனவு. அவர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.. பவர் மட்டும்தான் அங்கே இல்லை.. அவர்கள் வெறும் அதிகார வெறியர்கள் அல்ல.. அவர்கள் சனாதான வெறியர்கள்.. அவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள்..
பவர்
அரசியல்வாதி என்றால் பவர்தானே என்று நீங்கள் நினைக்கலாம்.. அவர்களின் கனவு திட்டத்தை நிறைவேற்றவேண்டுமானால், இங்கே "இந்து" என்ற உணர்வு இயல்பாகவே தூண்டப்பட வேண்டும்.. அது மேலும் வலுப்பெற வேண்டும்.. அது என்றும் நிலைப்பெற வேண்டும்.. அதுக்கு அவர்கள் கையாளும் யுக்திதான் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும்.. உண்மையான அரசியலை சொல்லி மக்களை நெருங்கினால் அவர்கள் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்.
மத உணர்ச்சி
சாதி உணர்ச்சியும் மத உணர்ச்சியும் மக்களின் இயல்பிலேயே குருதி ஓட்டத்தில் இருக்கிற காரணத்தினால்தான, அதை அறுவடை செய்து கொள்ள விரும்புவார்கள்.. அந்த உணர்வை பயன்படுத்தி கொள்ள விரும்புவார்கள்.. பாஜகவின் மீது தனிப்பட்ட முறையில் இருக்கும் கோபத்திலோ வெறுப்பிலோ நான் இதை சொல்லவில்லை.. உள்ளீடான அரசியலை உணர்ந்துதான் சொல்கிறேன்.. அவர்களின் தொலைநோக்கு பார்வை அரசியலை புரிந்து கொண்டதால்தான் இதை சுட்டிக்காட்டுகிறேன்.
தமிழகம்
காங்கிரஸ் இல்லாத இந்தியா, இடதுசாரிகள் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழகம்.. என்ன ஒரு யதேச்சதிகார போக்கு என்று பாருங்கள்.. கொஞ்சம் யோசித்து பாருங்க, கடந்த தேர்தலில் அதிமுக மட்டும் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்திருந்தால், இன்னைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் எச்.ராஜாதான்.. அப்படி நடந்திருந்தால், இன்னைக்கு யார் யாரோ வந்து பேசியிருப்பாங்க.. இன்னைக்கு அவங்கவங்க வாலை சுருட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க.
திமுக அரசு
இப்பவும் சிலர் வெளியே வந்து எதாவது சொல்லிட்டு தான் இருக்காங்க.. ஆனால் திமுக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.. சாதி வெறியர்களை சுதந்திரமாக பேசவில்லை என்று நாம் சொல்லவில்லை.. ஆனால், எட்டி உதைத்தால் 1 லட்சம் ரூபாயா? இது எந்த நாட்டு கலாச்சாரம்? யாரால் பரவியது இந்த கலாச்சாரம்? துணிச்சல் யாரால் வந்தது?" என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.