காங்கிரஸின் வெற்றி அல்ல இது.. பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு.. அதிமுக அதிரடி கருத்து!
Recommended Video
சென்னை: 5 மாநிலத் தேர்தல் வெற்றி என்பது காங்கிரஸின் வெற்றி அல்ல. பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு இது என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கசப்பையே கொடுத்துள்ளன. ஆட்சியில் இருந்து வந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானை அது இழந்துள்ளது. சட்டிஸ்கரில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தெலுங்கானா, மிசோராமிலும் எதுவும் நடக்கவில்லை. மிசோரமில் முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளது மட்டுமே அதற்கு ஆறுதலான விஷயம்.
இந்தத் தேர்தல் முடிவு குறித்து தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். பொதுமக்களும் இதுகுறித்த விவாதங்களில் இறங்கியுள்ளனர். இது காங்கிரஸின் வெற்றியா அல்லது பாஜகவின் வீ்ழ்ச்சியா என்ற வாதம் சூடுபிடித்துள்ளது.
பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு
இந்த நிலையில் அதிமுக தரப்பில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த எம்.பி. ஒருவர் கூறுகையில், இதை காங்கிரஸின் வெற்றியாக பார்க்க முடியாது. மாறாக பாஜகவுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள அழுத்தம் திருத்தமான தீர்ப்பு. மாற்று இல்லாததால், காங்கிரஸை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மாநில அரசுகள் மீது அதிருப்தி
ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும், சட்டிஸ்கரிலும் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. காரணம் அந்த மாநில அரசுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்ததால். இது இயல்பானது. இதை தேசிய அளவில் பார்க்க வேண்டியதில்லை.
தெலுங்கானாவில் வெல்லலையே
காங்கிரஸ் அலை வென்றது என்று கூறினால் ஏன் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெல்லவில்லை. அங்கு பெரிய கூட்டணியுடன்தானே காங்கிரஸ் போட்டியிட்டது. மிசோரமில் ஏன் ஆட்சியை இழந்தது. எனவே இது காங்கிரஸின் வெற்றி அல்ல. மாறாக பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.
எதிரொலிக்கும்
மேலும் அவர் கூறுகையில் இந்த தாக்கமானது நிச்சயம் லோக்சபா தேர்தலிலும் இருக்கும். அதை மறுக்க முடியாது. பாஜக மீதான மக்கள் அதிருப்தியால் நிச்சயம் பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு லாபம் கிடைக்கவே செய்யும் என்றார் அவர்.
தமிழகத்தில் பலத்த அடி
அந்த எம்பி மேலும் கூறுகையில் கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை கிடைத்தன. ஆனால் இந்த முறை ஒரு கட்சி கூட கிடைக்காது என்றார். அதிமுக சேருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் 2014 தேர்தலில் பாஜகவுடன் சேருவதில்லை என்ற முடிவை அம்மா எடுத்தார். அம்மா வழியிலதான் நாங்களும் பயணிப்போம் என்றார் அவர்.