அதிமுக ஆபீசில் பேனர்கள் அகற்றம்.. ”காலம் பதில் சொல்லும்” நிதானம் காட்டும் ஓபிஎஸ்.. பின்னணி!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் பேனர்களை அகற்றியது குறித்து ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமி - ஓபன்னீர்செல்வம் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு வழக்குகளுக்கு பின், கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் முதல் தீர்ப்பில் வெற்றி கிடைத்தாலும், மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எதிராகவே அமைந்தது. இதனைத்தொடந்து ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சந்திப்பு
இதற்கிடையில் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது சரிதான் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சமீப காலமாக ஓ.பன்னீர் செல்வத்தின் பலம் குறைந்துள்ளது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஓபிஎஸ் - ராமச்சந்திரன் ஆலோசனை
இந்த நிலையில் நேற்றிரவு பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது கட்சி விதிகள், கட்சியை கைப்பற்றுவதற்கான வியூகங்கள் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை கேட்டதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சசிகலாவும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்திருந்தார்.

ஓபிஎஸ் பேனர்கள் அகற்றம்
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. இதில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைகளுக்குள் சென்றுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காலம் பதில் சொல்லும்
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேனர்கள் அகற்றப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பிய போது, அதிமுக அலுவலகத்தில் எனது புகைப்படத்தை அகற்றியதற்கு காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். சில வாரங்களாக ஓபிஎஸ் நிதானமாக செயல்பட்டு வருவது பலர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications