திருப்பதி திருக்குடை ஊர்வலம்.. வடசென்னையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து மாற்றம்!
திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் இருந்து 21 திருக்குடைகள் உபய உற்சவ ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். இந்த திருக்குடைகள் ஊர்வலமாக செல்லப்பட்டு, திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுவது ஐதீகம். புகழ் பெற்ற இந்த திருக்குடைகள் ஊர்வலம், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு திருப்பதி திருக்குடை, நாளை வழக்கமான முறையில் மீண்டும் நடைபெறவுள்ளது. திருப்பதி திருக்குடை கவுன் தாண்ட உள்ளதால், வடசென்னை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடசென்னை பகுதியில், நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், நாளை காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை வடசென்னை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 8 மணி முதல் ஊர்வலம் வால் டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை, அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக ஈ.வெ.ரா. பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
மாலை 3 மணி முதல் ஊர்வலம் பேசின் பாலத்தை கடக்கும் வரை, வால்டாக்ஸ் சாலை, அதன் இணைப்புச் சாலைகளில் வானங்கள் செல்ல அனுமதியில்லை. மேலும், சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி வானங்கள் செல்லவும் அனுமதியில்லை. இதற்கு பதிலாக பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை, ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.
திருக்குடை ஊர்வலம் மூலகொத்தலம் பகுதி மற்றும் பேசின் பாலம் செல்லும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இதேபோல், ராஜா முத்தையா சாலையில் ஊர்வலம் வரும்போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப்பதில், வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக வாகன ஓட்டிகள் பயணிக்கலாம்.
திருப்பதி திருக்குடை ஊர்வலம், அவதான பாப்பையா சாலையில் செல்லும்போதும், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செல்லும்போதும், ஓட்டேரி சந்திப்பை அடையும் போதும், கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தை அடையும் போதும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications