சட்டசபை சர்ச்சை..சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ரவி அவசர ஆலோசனை..ராஜ்பவனில் பலத்த பாதுகாப்பு
சென்னை: சட்டசபையில் நடைபெற்ற சர்ச்சை சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஆளுநர் மாளிகை முன்பாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டம், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது, அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையில், சில பகுதியை தவிர்த்துவிட்டு ஆளுநர் உரையை வாசித்தார்.

இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபை தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தனது உரையை முழுமையாகப் படிக்காததற்கு வருத்தம் தெரிவித்ததுடன், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் பேரவை குறிப்பில் இடம்பெறும். இவை தவிர்த்து ஆளுநர் பேசியது இடம்பெறாது என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார்.
சட்டசபையில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை வாசித்து முடிக்கும்போது, சட்டசபையை விட்டு ஆளுநர் வெளியேறினார். அவர், தேசிய கீதம் பாடும் முன்னரே வெளியேறியது சர்ச்சைக்குள்ளாகியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, திங்கட்கிழமை இரவு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் தலைமை வழக்கறிஞர், திமுகவின் வழக்கறிஞர் அணியின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோருடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலமாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. அப்போது, ஆளுநர் மீது உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வில் வழக்கு தொடர்வது குறித்த கருத்து பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆளுநரும் இந்த விவகாரம் தொடர்பாக சட்டநிபுணர்களை ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆளுநர் உரையை வாசிக்கும் போது இடையூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்தும், சட்டப்பேரவை விதிகள் மீறப்பட்டதா? என்பது குறித்தும், ஆளுநர் உரையில் இடம்பெற்று தவிர்த்தவை மீண்டும் அவைக்குறிப்பில் தீர்மானம் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார் ஆளுநர் ரவி. சட்டசபையில் நடைபெற்ற சர்ச்சை சம்பவங்கள் குறித்து டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ள நிலையில் ராஜ்பவன் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று மதியம் 1.15 மணி அளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசும்போது, தமிழ்நாடு ஆளுநர் தமிழை சரியாக உச்சரிக்கவில்லை. இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால் நான் ஆளுநர் மாளிகைக்கு சென்று போராட்டம் நடத்துவதாகக் கூறிவிட்டு தொலைபேசியை கட் செய்து விட்டார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை அருகே உள்ள காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது பெட்ரோல் கேனுடன் ஒருவர் அங்கு வந்தார். அவரைப் பிடித்து விசாரணை செய்தபோது, அவரது பெயர் ரவிச்சந்திரன் என்பதும், சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் குளிர்பான கடை ஒன்றில் வேலை செய்வதும் தெரிய வந்தது. மேலும் இவரின் சொந்த ஊர் தென்காசி என்பதும் தெரிய வந்தது.
இவர் ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்ததும் பின்னர் டிடிவி தினகரனின் அமமுகவில் இருப்பதாகவும், இவர் ஏற்கனவே ஒரு முறை டி.டி.வி. தினகரனை சிபிஐ கைது செய்தபோது சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று சம்பவத்தின்போது இவர் சற்று மது போதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இவர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கிண்டியில் உள்ள ராஜ்பவன் முன்பாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications