இந்த முறை விஜயதரணிக்கு சீட் தரக்கூடாது.. அடுத்த போராட்டம்.. காங். அலுவலகத்தில் பதற்றம்
சென்னை: இந்த முறை விஜயதரணிக்கு சீட் தரக்கூடாது என்று காங்கிரஸ் அலுவலகத்தில் மேலும் ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணுபிரசாத், கேஎஸ் அழகிரி ஆதரவாளர்கள் போட்டிக்கு போட்டியாக போராடி வருகிறார்கள்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் கோஷ்டி பூசலும் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. திமுகவிடம் 25 சீட் கேட்டு வாங்கிய காங்கிரஸ் கட்சியால் வேட்பாளர்களை இறுதி செய்ய போராடி வருகிறது.
மற்ற கட்சிகளில் வேட்பாளர்களை அறிவித்த பின் போராட்டம் நடக்கிறது என்றால், காங்கிரஸ் கட்சியில் இவர்களுக்கு சீட் தரக்கூடாது, அவர்களுக்கு சீட் தரக்கூடாது என்று இப்போதே அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்ட மன்ற தொகுதியில் விஜயதரணி மீண்டும் போட்டியிட அந்த பகுதி காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ வாக விஜயதரணி பதவி வகித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளாக தொகுதியில் மக்கள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை சந்திக்கவோ, கட்சி பிரட்சனைகளை சந்திக்கவோ முன் வர வில்லை என்று அந்த பகுதியில் உள்ள ஒரு தரப்பு காங்கிரசார் புகார் கூறியுள்ளனர்.
யாராவது ஒருவருக்கு கொடுங்க
விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட 73 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரை நிறுத்த தலைமை முன் வர வேண்டும், தொடர்ந்து தலைமை மீண்டும் விஜயதரணியின் பெயரை அறிவிக்கும் பட்சத்தில் விஜயதரணிக்கு எதிராக தொகுதிக்குட்பட்ட ஊராட்சி, பஞ்சாயத்து, நகராட்சி என 22 பேரை போட்டி வேட்பாளராக களம் இறங்க தயாராக உள்ளதாகவும் அந்த பகுதி காங்கிரஸ் கூறியிருந்தனர்.
காங்கிரசார் போராட்டம்
இந்த நிலையில் வேட்பாளர்களை இன்று காங்கிரஸ் தலைமை அறிவிக்க இருந்த நிலையில், இந்த முறை விஜயதரணிக்கு சீட் தரக்கூடாது என்று காங்கிரஸ் அலுவலகத்தில் மேலும் ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேஎஸ் அழகிரி
இதனிடையே ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத், சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் திடீரென இன்று காலை உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ''காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது உறவினர்களுக்குத் தொகுதியைக் கேட்டுப் பெறுகிறார்கள். தமாகாவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தவர்களுக்கு தொகுதி வழங்கப்படுகிறது. இந்த காங்கிரஸ் பேரியக்கம் ராகுல் காந்தியின் ரத்த வியர்வையால் வளர்ந்த கட்சி. கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சீட் வழங்குவதில் என்ன நியாயம்? உண்மையாக உழைப்பவர்களுக்குத் தொகுதிகளை வழங்க வேண்டும்'' என்றார். இவர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேஎஸ் அழகிரி ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நிறைய தவறு
இதேபோல் வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஜோதிமணி எம்பியும் வேதனையுடன் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள், நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
துரோகம் செய்கிறார்கள்
எனது தலைவர் ராகுல் காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
வலிமை உண்டு
உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு" இவ்வாறு கூறியுள்ளார்.
சீன் அதிகம்
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், "தன் தந்தையால் எம்.எல்.ஏ. இப்ப எம்.பி. வாங்கியவர்கள் இப்ப மகன்களுக்கு கூடாது என தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது பாஜக+ அதிமுக வை உதவ இந்த குழப்பமா? நான் உட்கட்சி விவகாரத்தை பொது வழியில் இந்த நாள்வரை பேசியதில்லை ஆனால் இன்று நாடாகங்களின் சீன் அதிகமாக இருப்பதால் உண்மையின் சில துளிகள்.கட்சிக்காக உழைத்த முன்னாள் மாவட்டத்தலைவருக்கு அதுவும் சில நூறு ஓட்டில் தோல்வியடைந்தவருக்கு மீண்டும் வந்த தொகுதியை வாங்கக்கூடாது என சண்டை போட்டு வரவிடமால் தடுத்தவர்கள் இன்று நியாயம் பேசலாமா? சோனியாகாந்தி தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழு வில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிரஸ் தொண்டனுக்கும் நியாமான முடிவாகக்கிடைக்கும் ஆனால் சிலர் விளம்பரதிற்காக காங்கிரஸ் இயக்கத்திற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.