மாறப்போகிறது சென்னையின் நுழைவு வாயில்.. தமிழக அரசு அறிவித்த செம்ம நியூஸ்
சென்னை: கூடுவாஞ்சேரி - பரனூர் இடையே ரூ.250 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலைத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சென்னையின் நுழைவு வாயிலில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தையும் சென்னையையும் இணைக்கும் பிரதான பாதை என்றால் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான பாதை தான். சென்னைக்கு தினசரி வரும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடந்து தான் வர வேண்டும்.
எனவே செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடுமையாக போக்குவரத்து நெரிசல் காலையிலும் மாலையிலும் ஏற்படுகிறது. விடுமுறைக்காலங்களில் பரனூர் சுங்கச்சவாடியை கடப்பதற்குள் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. அதேபோல் அதிகாலையில் வருவதற்கும் படாத பாடு பட வேண்டியுள்ளது.
பிரியங்கா காந்தியின் குர்தாவை தொட யார் தைரியம் தந்தது..? உ.பி. போலீஸை விளாசும் பாஜக பெண் தலைவர்..!
போக்குவரத்து நெரிசல்
ஒருவேளை வேறு பாதையை தேர்வு செய்து வர விரும்பினால் செங்கல்பட்டில் இருந்து கேளம்பாக்கம் சென்று அங்கிருந்து ஒஎம்ஆர் சாலையை பிடித்து வர வேண்டும். அது நீண்ட தூரம் சுற்றி வர வேண்டிய பாதை என்பதால் அதை பலரும் விரும்புவதில்லை.
கூடுவாஞ்சேரி-பரனூர்
இதனிடையே பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி முதற்கட்டமாகப் பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரையுள்ள பகுதியில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனிடையே அடுத்த கட்டமாகக் கூடுவாஞ்சேரி முதல் பரனூர் வரையிலான 13 கிலோமீட்டர் நீளத்துக்கு 8 வழிச்சாலையாக விரிவாக்கப்பட உள்ளது.
மின் கம்பங்கள் மாற்றம்
250 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்துச் சாலைப் பணிக்காக மின்கம்பங்களை இடமாற்றுவது குறித்து மின்வாரியத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 8 வழிச்சாலைப் பணிகளை முடிக்க ஓராண்டு ஆகும் என நெடுஞ்சாலைத் துறையினர் கூறியுள்ளனர்.
2022ல் விடை கிடைக்கும்
எனவே இந்த பணிக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கினால் அடுத்த ஆண்டு இறுதியோலோ அல்லது 2022ம் ஆண்டு துவகக்கத்திலோ சென்னையின் நுழைவு வாயிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.