இனி 3% தான்.. மகளிர் சுய உதவிக்குழு கடன் வட்டி அதிரடியாக குறைப்பு.. அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு
சென்னை : மகளிர் சுய உதவிக்குழுவில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு 12%இல் இருந்து 3% ஆக வட்டியை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 43,39,780 உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இன்று கூட்டுறவு துறை சார்பாக விவாதங்கள் நடந்தது.
திருப்பூரில் ரைஸ்மில் ஓனர் மகன் கடத்தல்.. ரூ.3 கோடி பேரம்.. 6 மணி நேரத்தில் கும்பலை பிடித்த போலீஸ்
அப்போது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி சட்டப்பேரவையில் இன்று வெளியிட்ட அறிவிப்பில், மகளிர் சுய உதவிக்குழுவில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு 12%இல் இருந்து 3% ஆக வட்டியை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஐ பெரியசாமி
வட்டி விகித குறைப்பின் மூலம் 3,63,881 குழுக்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். மொத்தம் 43,39,780 உறுப்பினர்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்.
எப்படி கடன் பெறுவது
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடையவும் மேலும் அரசியல் அதிகாரம் பெற உதவிடும் வகையிலும் இந்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்துகிறது. இத்திட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நிதி உதவி வங்கிகளின் மூலம் கடனாக பெற வழிவகை செய்கிறது. குறைந்தது 6 மாதத்தை நிறைவு செய்த சுய உதவி குழுக்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். அதற்கு கடனுக்கான தர மதிப்பீடு, தொழில் கடன் பெற தொழில் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் தள்ளுபடி
முன்னதாக தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். அத்துடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கோரோனா சிறப்பு கடன் உள்பட ரூ20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
பெண்கள் வரவேற்பார்கள்
இந்நிலையில் தான் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி சட்டப்பேரவையில் இன்று மகளிர் சுய உதவிக்குழுவில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு 12%இல் இருந்து 3% ஆக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிகப்பெரிய அறிவிப்பு ஆகும். ஏனெனில் 12 சதவீத வட்டியில் இதுநாள் வரை கடன் வழங்கப்பட்டது. இனி 3 சதவீத வட்டி என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். இத்திட்டம் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்.