முடங்கிய ட்விட்டர்.. ரீலோட் செய்வதில் பிரச்சனை..நாளை ‛ப்ளூடிக்’ கட்டணம் அமலாகும் நிலையில் பிரச்சனை
சென்னை: இந்தியாவில் மாலை 7 மணி முதல் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் பயனாளர்களுக்கு ட்விட்டர் பக்கம் செயல்படாமல் முடங்கியது. ரீலோட் செய்வதில் பலருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. நாளை ‛ப்ளூடிக்' அம்சத்துக்கு கட்டணம் வசூல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
உலகில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர் ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார்.
இதன் தொடர்ச்சியாக அவர் ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட ஏராளமானவர்களை அதிரடியாக நீக்கினார்.

நாளை முதல் ப்ளூடிக் கட்டணம்
அதன்பிறகு ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் வகையில் ‛ப்ளூடிக்' வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அவர் அறிவித்தார். அதன்படி ப்ளூடிக் பெற்றவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கு ட்விட்டர் பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கட்டண நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ப்ளூடிக் கட்டண முறை நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

2 வகைகளில் கட்டணம்
இதில் 2 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ‛ஆன்ட்ராய்டு' பயன்படுத்துவோருக்கு மாதம் 8 டாலரும், ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்கு 11 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.907) கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ளூடிக் பயனாளர்கள் 1080p வீடியோக்களை பதிவிடவும், ட்வீட்களை எடிட் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

முடங்கிய ட்விட்டர் செயல்பாடு
இந்நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்று இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ட்விட்டர் பக்கம் திடீரென்று இயங்காமல் முடங்கியது. அதன்படி இன்று மாலை 7 மணி முதல் ட்விட்டரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ட்விட்டர் பக்கத்தை ரீலோட் செய்ய முடியாத வகையில் ட்விட்டர் வலைதளம் முடங்கியது. இதுபற்றி ‛டவுன்டிடேக்டர்' எனும் வலைதளம் 7.15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிரச்சனை ஏன்?
இந்தியாவில் செல்போன் மற்றும் டெஸ்க்டாப் வெர்சன் என இரண்டு வகையிலான ட்விட்டர் பயன்பாடும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். 64 சதவீத ட்விட்டர் பயனாளர்கள் ட்விட்டர் செயலியால் இந்த பிரச்சனை உருவானதாக கூறிய நிலையில், 34 சதவீதம் பேர் ட்விட்டர் இணையதள பிரச்சனையால் சிரமத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன?
இதன் தொடர்ச்சியாக மீண்டும் தற்போது ட்விட்டர் வலைதளம் செயல்பட துவங்கி உள்ளது. இருப்பினும் ட்விட்டர் பக்கம் செயல்படாமல் இருந்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றிய எந்த தகவலும் தற்போது வரை பகிரப்படவில்லை. இருப்பினும் தொழில்நுட்ப கோளாறு, சர்வர் பிரச்சனை உள்ளிட்டவற்றால் ட்விட்டர் செயல்பாடு பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியபிறகு தற்போது 2வது முறையாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 4ம் தேதி ட்விட்டர் ‛டெஸ்க்டாப்' வெர்சனில் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications