குவியும் புகார்கள்! முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்து புகார்கள்.. விரைவில் கைது?
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் அவர் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சி சமயத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் கூறி பரபரப்பைக் கிளப்பியவர்.
அமைச்சராக இருந்த சமயத்தில் ஆவின் உட்பட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி இவர் பண மோசடியில் ஈடுபட்டதாக அடுக்கடுக்கான புகார்கள் கிளம்பியது.
மூவ்மென்ட்டை தடுக்க.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கம்
ராஜேந்திர பாலாஜி
திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும், இரண்டு பேர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் அளித்தனர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது மொத்தம் 5 பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜாமீன் மனு
அவரை கைது செய்யத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவியும் புகார்
இந்தச் சூழ்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 பேர் பண மோசடி புகார் அளித்துள்ளனர். சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த குணா தூயமணி தனது மகனுக்கு ஏ.பி.ஆர்.ஓ. வேலை பெறுவதற்கும், மதுரை வில்லாபுரம் மீனாட்சி சுந்தரம் என்பவர் மாநகராட்சி அலுவலக உதவியாளர் வேலை பெறுவதற்கும் ராஜேந்திர பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகப் புகார் அளித்துள்ளனர். இதுதவிர ராஜேந்திர பாலாஜி மீது மற்றொரு புகாரும் பெறப்பட்டுள்ளது.
8 தனிப்படைகள்
கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் ஜாமீன் பெறுவதற்கு முன்னதாக கைது செய்ய வேண்டும் என போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸூம் அளிக்கப்பட்டது.
கைது செய்ய முடியவில்லை
இது மட்டுமின்றி செல்போன் சிக்னல் மூலம் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை கண்டறிந்து கைது செய்யும் முயற்சியிலும் தமிழ்நாடு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவருடன் தொடர்பில் இருந்த 600 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்களது செல்போன்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், இதையெல்லாம் தாண்டியும் ராஜேந்திர பாலாஜியை தமிழக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.