ஹை ஸ்பீடு அமைச்சர் உதயநிதி..கொட்டும் மழையிலும் அசராத உழைப்பு
சென்னை: முதல்நாள் கழகத் தொண்டர் ஒருவரின் இல்லத் திருமணவிழா. அடுத்த நாள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட புதிய பயனாளிகள் வங்கி அட்டை வழங்கும் விழா. அதற்கு அடுத்த நாள் தனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் விழா.
இப்படி தினம் ஒரு நிகழ்ச்சி அல்ல, பல நிகழ்ச்சி. அந்தளவுக்கு பிசியாக இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆகவேதான், 'களப்பணியில் கவனமாகச் செயல்பட்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி. அது மேலும் தொடரும். அதற்கு என் வாழ்த்துகள்' என்று அரசு விழாவில் அங்கீகரித்துப் பேசி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அவர், மற்ற அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டத்திற்கும் போகிறார். தனது விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் துறை சார்ந்த விளையாட்டு வீரர்களை அழைத்து தேவையான உதவிகளைத் தரவும் செய்கிறார்.

அதற்கு நடுவே மாவட்டம் தோறும் களப்பணி செய்து, அரசு இந்திரத்தை வேகமாக முடுக்கி விடவும் செய்கிறார். அவரது தொகுதி குழந்தைகள் அவரை 'நண்பன்டா' என்கிறார்கள். கழகத் தோழர்கள் அவரை 'கழகத் தலைவன்' என்று கொண்டாடுகிறார்கள். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் அவரை, வாரி வழங்கும் 'மாமன்னன்' என்கிறார்கள்.
இன்றைய தேதியில் அரசியல் ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் அவர்தான். ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு சர்ச்சையைப் பதற்றமே இல்லாமல் கூல் ஆக டீல் செய்கிறார்.

'முதல்ல நீட்டை ஒழிப்போம். அப்புறம் சனாதனம் பற்றி பொறுமையாக உட்கார்ந்து பேசுவோம். நாங்கள் இப்போது இல்லை. கடந்த 100 வருஷமா சனாதனம் பற்றிப் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அண்ணா திருமாவளவன் பேசாததை நான் ஒன்று புதுசா பேசிவிடவில்லை. முதல்ல மனிதன். அப்புறம்தான் அமைச்சர்' என எந்தப் பால் போட்டாலும் அதில் சிக்சர் அடிக்கும் கைதேர்ந்த ஆட்டக்காரராக வளர்ந்து நிற்கிறார் உதயநிதி.

ஒரு காலத்தில் 'அரசியலா? நமக்கு செட் ஆகாது. அப்பா அரசியலிலிருந்தா நானும் வரவேண்டும் என்று கட்டாயம் இல்லை' என்றவர், இன்று கற்றுத் தேர்ந்து பெரும் அரசியல்வாதியாக வலம் வருகிறார்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் மட்டுமில்லை வட இந்தியாவிலும் உதயநிதியை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அந்தளவுக்கு அங்கேயும் உதயநிதி பேச்சு போய்ச் சேர்ந்திருக்கிறது.

அவரே சொன்னதுபோல 'உதயநிதியின் டைரி அமைச்சர் சேகர்பாபு'விடம்தான் இருக்கிறது. மாதத்திற்கு 4 நலத்திட்ட நிகழ்ச்சிகளைக் கட்டாயம் அமைச்சர் சேகர்பாபு போட்டுவிடுகிறார். நவம்பர் 7 ஆம் தேதி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி. அதில் மாவட்டக் கழக பணியாளர்கள், குடிநீர் வடிகால் மற்றும் கழுவுநீர் வாரிய ஊழியர்கள் என 2300 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

அதே வேகத்துடன் அன்றே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்துள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அட்டைகளை வழங்கினார்.
இதேநாளில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தும் 'தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச மாநாடு 2023' தொடங்கிவைத்து, விளையாட்டுத்துறைக்குள் அறிவியல் எந்தளவுக்கு உதவி செய்கிறது என்பதை விளக்கி வீரர்கள் மத்தியில் பேசி, அரசின் நிலைப்பாடு என்ன என்பதைப் பலருக்கும் புரியவைத்தார்.

அதே வேகத்துடன் சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞரணியின் 2ஆவது மாநில மாநாட்டுக்கான குழுக்கள் தலைமைக் கழகத்தால் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநாட்டுப் பணிகளை முன்னெடுப்பது பற்றியும் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி புதிய நிர்வாகிகளுடன் கூடிய விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதற்கான முடிவுகளை எடுத்து அதை நடைமுறைப்படுத்தவும் உத்தரவு போடுகிறார்.
இந்த வாரம் அவரது கவனம் நீட் எதிர்ப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தில்தான் இருந்தது. எப்படியாவது நீட் விலக்கைத் தமிழ்நாட்டுக்கு வாங்கித்தர வேண்டும் என்று பல முயற்சிகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோவைச் சந்தித்து கையெழுத்து பெற வேண்டி மதிமுக அலுவலகத்திற்கே சென்று பெரிய முகாம் ஒன்றை நடத்திப் பல நிர்வாகிகளிடம் கையெழுத்துகளைப் பெற்றார். அதற்கு முன்னதாக விசிக அலுவலகம் சென்று தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அவரது கட்சியினரிடம் ஆதரவைத் திரட்டினார்.

திமுக 2024இல் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது? 40க்கு 40 தொகுதிகளை எப்படி வென்று எடுப்பது என்பதற்காக மண்டலம் வாரியாக பாசறைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. மூன்றாவது கூட்டம் திருவள்ளூரில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.
அதில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ள முடியாத சூழல். அவருக்கு உடல்நலம் சரியில்லை. சரியாகப் பேச முடியாத அளவுக்குத் தொண்டைக் கட்டி இருந்தது. மருத்துவர்கள் இக்கூட்டத்தைத் தவிர்க்கச் சொன்னார்கள். ஆனாலும், காணொலி வாயிலாகச் சிறு உரையை ஆற்றினார் ஸ்டாலின்.

அதற்கு சில வாரங்கள் முன்னதாக உதயநிதிக்குக் கண்களில் சின்ன ஒவ்வாமை. அவரையும் கூட்டத்தைத் தவிர்க்கச் சொன்னார்கள் மருத்துவர்கள். ஆனால், அவர் ஸ்டைலாக கண்ணாடி வாங்கி போட்டுக்கொண்டு அரசு விழாக்களில் வந்து அசால்ட் ஆகப் பேசி, பலரது கைத்தட்டல்களை அள்ளினார். அதே வேகத்தோடு அவர் திருவள்ளூர் பாசறைக் கூட்டத்திலும் பங்கேற்று ஸ்டாலின் வராத வருத்தத்தைக் காணாமல் போகும்படி செய்தார்.

இதில் அவரது மனிதாபிமானமும் வெளிப்பட்டது. சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்த திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சந்திரன் எதிர்பாராத விபத்தில் சிக்கினார். அதை அறிந்த உதயநிதி அவரையும் போய் சந்தித்து ஆறுதல் அளித்துவிட்டு சென்னை திரும்பினார்.

இதைவிட இன்னொரு ஹைலட் நிகழ்ச்சி. 'நடப்போம் நலம் பெறுவோம்' என்று ஒரு அரசி விழா. அதாவது தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள மக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் பசுமையாகவும் சுற்றுச்சூழல் நிறைய இடத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதற்குமான துவக்கவிழா இது. சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றது.
அன்றைக்கு அதிக மழை. பலரும் நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்பட்டு விடுவார் என நினைத்தனர். ஆனால், கொட்டும் மழையில் அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் உற்சாகமாக நடைப்பயிற்சியை மேற்கொண்டார் உதயநிதி.

அதற்கு முன்னதாக தான் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கான 'கலைஞர் நூலகத்தை' தொடங்கிவைத்துவிட்டு வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி நாகை மாவட்டம். மேலே சொன்ன நிகழ்ச்சி சென்னை மாவட்டம். புயல் தரையைக் கடப்பதற்குக்கூடக் கொஞ்சம் தாமதம் ஆகும். இவர் மாவட்டம் தாண்டி வேறு மாவட்டம் நிகழ்ச்சிக்கு வரத் தாமதமே ஆகாது போல. அந்த அளவுக்கு ஃபயர்.

இந்த மாதம் தொடங்கி இன்னும் சரியாக 15 நாள்கள் ஆகவில்லை. ஆனால், நவம்பர் 1 ஆம் தேதி விளையாட்டு பயிற்சியின்போது காயமடைந்த மாணவர் சங்கீத்குமாருக்குச் சிகிச்சை செலவிற்காக ரூபாய் 1.40 லட்சத்திற்கான காசோலை வழங்கியது தொடங்கி, தேசிய& சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த மாற்றுத்திறனாளி தடகள வீரர்களான மனோஜ், ஆனந்தன் மற்றும் வீராங்கனை ரோஸ்மீனா ஆகியோருக்கு, விளையாட்டு வீரர்களுக்கான 3% சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலராகப் பணி நியமன ஆணையை வழங்கியது, சத்தியமூர்த்தி பவன் சென்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் நீட் தேர்வு எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டியது வரை 15 நாளில் 30 நிகழ்ச்சிகளுக்கு மேல் கலந்துகொண்டு, மற்ற அமைச்சர்களைக் காட்டிலும் முன்வரிசையில் வந்து நிற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications