பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகம்.. மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.. உதயநிதி ஆவேசம்
சென்னை: "மத்திய அரசின் பட்ஜெட், தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது" என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2025- 2026ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பு இல்லாதது, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனைகளை தீர்க்க பட்ஜெட்டில் நல்ல திட்டங்கள் இல்லை என விமர்சிக்கப்படுகிறது.
மேலும், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் பேட்டி
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்த திட்டமும் இல்லை. தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது ஒன்றிய அரசு. மெட்ரோ ரயில் திட்டம், சாலை பணிகள் என எந்த திட்டத்துக்குமே தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.
எங்கு தேர்தல் நடக்கிறதோ, எங்கு அவர்களின் கூட்டணி ஆட்சியில் இருக்கிறதோ அங்கு மட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளனர். தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு மீது வன்மம்
மேலும் பட்ஜெட் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாததும், தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறாததும் பாசிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டை கண்டுகொள்ளாமல், நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவும் தேர்தல் கணக்குகளோடும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வாரி வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்நாடு புறக்கணிப்பு
நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணிக்க, புறக்கணிக்க தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, தமிழக முதல்வர் ஸ்டாலினும், மத்திய அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். "வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கை மூலமாக நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பாஜகவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது" என மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
"ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் - இரயில்வே திட்டங்கள் - கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?" என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications