சார் ப்ளீஸ்.. தகிக்கும் முல்லைப்பெரியாறு.. முதல்வருக்கு குவியும் கோரிக்கை.. குரல் தந்த ப்ரித்விராஜ்!
சென்னை: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டும்.. கேரள மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று மலையாளிகள் பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு பேஸ்புக்கில் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கேரளாவில் தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் கோர்ட் உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் சேகரிக்க முடியும். பல்வேறு சோதனைகள், கமிட்டி ஆராய்ச்சிகள் , நீதிமன்ற வழக்குகளுக்கு பின்பாக இந்த அணையின் நீர் மட்டும் 142 அடியாக இறுதி செய்யப்பட்டது.
142 அடியை இந்த அணையின் நீர் மட்டம் எட்டிய பின் கால்வாய் வழியாக வைகை அணைக்கு நீர் திறந்து விடப்படும்.
வடகிழக்குப் பருவமழைக்கு முன்பே நிரம்பிய அணைகள் - மேட்டூர் அணை 101 அடி, முல்லைப்பெரியாறு 137 அடி
மழை
தற்போது அங்கு பெய்து வரும் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு நிகர நீர்வரத்து வினாடிக்கு 2,109 கன அடியாக உள்ளது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டு பக்கம் வினாடிக்கு 1,750 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் முல்லைப்பெரியாறில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக உடனடியாக வைகை அணைக்கு திறந்து விட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை
முதல்வர் பினராயி விஜயன் வைத்துள்ள கோரிக்கையில், முல்லைப்பெரியாறு அணையில் நீர் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தால் கேரளா எல்லையோர கிராமங்களில் வெள்ளம் ஏற்படும். இதனால் தமிழ்நாட்டில் உள்ள வைகை ஆற்றுக்கு கால்வாய் வழியாக படிப்படியாக தண்ணீரை திறந்துவிட வேண்டும். இதில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும், என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விஸ்வரூபம்
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆம், மீண்டும் முல்லைப்பெரியாறு அணையை கைவிட வேண்டும். புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் மழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில்தான் முல்லைப்பெரியாறு அணை நிரம்பினால் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும். எங்களை காப்பாற்றுங்கள் என்று அம்மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
முல்லைப்பெரியாறு
முதல்வர் ஸ்டாலினின் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து கேரள மக்கள் பலர் முல்லைப்பெரியாறு அணையை உடனே திறந்து வைகை ஆற்றுக்கு தண்ணீரை வெளியேற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். சார் ப்ளீஸ்.. தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.. மக்கள் உயிருடன் விளையாட வேண்டாம் என்ற கோரிக்கைகளுடன் மலையாளிகள் பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு ட்வீட்டரிலும், பேஸ்புக்கிலும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினின் பேஸ்புக்
முக்கியமாக முதல்வர் ஸ்டாலினின் ட்வீட்டர் பக்கத்தில் தொடர்ந்து மலையாளிகள் பலர் இது தொடர்பாக கோரிக்கை விடுத்து கமெண்ட் செய்து வருகிறார்கள். #SaveKerala #decommisionmullaperiyardam என்று பல ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இவர்கள் வைக்கும் கோரிக்கைகளில், முல்லைப்பெரியாறு அணையை தற்போது உடனடியாக திறந்து வைகை ஆற்றில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
கோரிக்கை
அதன்பின் 125 வருடம் பழமையான முல்லைப்பெரியாறு அணையை உடனடியாக கைவிட வேண்டும். பின்னர் புதிய அணை கட்ட வேண்டும். இந்த அணையால்தான் எங்கள் மாநிலத்தில் வெள்ளம் ஏற்படுகிறது என்று அம்மாநில மக்கள் தங்கள் கோரிக்கைகளில் குறிப்பிட்டு உள்ளனர். இது முழுக்க முழுக்க உண்மை கிடையாது என்றாலும் தொடர்ந்து இதே பிரச்சாரத்தை அவர்கள் இணையத்தில் முன்னெடுத்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் கேரள பிரபலங்களும் இதே கோரிக்கையை ஒற்றுமையாக முன்னெடுக்க தொடங்கி உள்ளனர்.
ப்ரித்விராஜ்
மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் ப்ரித்விராஜ் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார். உண்மை எதுவாக இருந்தாலும், ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும்.. 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அணையை தொடர்ந்து பயன்படுத்துவது சரியாக இருக்காது. இப்போது நாம் அரசியல், பொருளாதாரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு எது சரியானதோ அதை செய்ய வேண்டும்.
தீவிரம்
நாம் இந்த சிஸ்டத்தை மட்டுமே நம்ப முடியும். சிஸ்டம் சரியான முடிவு எடுக்கும் என்று நம்புவோம் என்று ப்ரித்விராஜ் குறிப்பிட்டுள்ளார். அவரை தொடர்ந்து இன்னும் பல மலையாள நடிகர்கள் இதே கோரிக்கையை வைத்துள்ளனர். பிரபலங்களின் கோரிக்கைகள் காரணமாக முல்லைப்பெரியாறு பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.