காய்கறி விலை குறையும்.. விவசாயிகளுக்கு லாபம் கூடும்.. தமிழ்நாட்டில் மீண்டு(ம்) வருகிறது உழவர் சந்தை
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் உழவர் சந்தை திட்டம் கொண்டுவரப்படும் என்று ஆளுநர் தனது உரையில் இன்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையில் புதிய அரசு பதவிக்கு வந்துள்ள நிலையில், இன்று சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில், மரபுப் படி ஆளுநர் உரை நிகழ்த்தினார்.
ஆளுநர் உரை அந்த வருடத்தில் ஆட்சி எந்த திசையை நோக்கி பயணிக்கப் போகிறது என்பதற்கான வழிகாட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழருக்கு முன்னுரிமை..லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம்- ஆளுநர் உரை முழு விவரம்
ஆளுநர் உரை
அதன்படி பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒரு திட்டம் உழவர் சந்தை தொடர்பானது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.
வீட்டிலேயே பழங்கள்
விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்படும். கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், வாகனங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே காய்கறிகளும், பழங்களும் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்களிடையே பெருமளவில் வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி, தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
உழவர் சந்தை திட்டம்
உழவர் சந்தை என்பது, கருணாநிதி தலைமையிலான, தமிழ்நாடு அரசால் 1999 ஆண்டு முதல் காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத் தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் அமைத்த சந்தைகள் ஆகும்.
கருணாநிதி அமைத்த குழு
1998இல் 'விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு' என்ற குழு ஒன்றை அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அமைத்தார். சண்டிகரில் 'அப்னே மண்டி' என்ற பெயரிலான பகுதியில் உழவர்கள் தங்களின் விவசாய பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதைப் பற்றி முதலமைச்சர் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதே போன்றதொரு விற்பனை முறை, ஆந்திராவில் இயங்கி வருவதையும் குறிப்பிட்டனர். இவற்றை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரிக்கச் சொல்லிய கருணாநிதி, அந்த அறிக்கை தன் கையில் கிடைத்த அன்றே, உழவர் சந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
எல்லோருக்கும் லாபம்
தமிழ்நாட்டின் முதல் உழவர் சந்தை மதுரை அண்ணா நகரில் திறக்கப்பட்டது. அவரின் 1999-2000 ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில், ஸ்டாலின் அரசு அந்த திட்டத்தை உத்வேகப்படுத்த உள்ளது. இதனால் இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதிப்பதால், பொருட்களின் விலை ஏற்றம் அடைவது தவிர்க்கப்படும். விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும்.