பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார்தான் ஆசான்...சிறப்புறுக செருப்பாளர்கள் -வைரமுத்து
பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார்தான் ஆசான் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார்தான் ஆசான் என்று வைரமுத்து கூறியுள்ளார். இப்படி ஓர் எதிர்ப்பு வடிவத்தைக்கற்றுக் கொடுத்தவரே பெரியார்தான் என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. அந்த சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிந்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்திருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பெரியார் ஆதரவாளர்களும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். அந்த சிலை அருகே ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவை அருகே வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
இந்த நிலையில் பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார்தான் ஆசான் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படி ஓர் எதிர்ப்பு வடிவத்தைக்கற்றுக் கொடுத்தவரே பெரியார்தான் என்று கூறியுள்ளார் வைரமுத்து. "வாழ்க வசவாளர்கள்"என்றார் அண்ணா "சிறப்புறுக செருப்பாளர்கள்" என்போம் நாம் என்று வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பல ஊர்களில் பெரியார் சிலைகளுக்கு சிலர் அவமரியாதை செய்திருந்தனர். காவித்துண்டு அணிவித்தும் பலர் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்திருந்தனர். பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்த விஷமிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை மற்றும் தாராபுரம் பகுதிகளில் இருக்கும் பெரியார் சிலைகள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் செருப்புகள் வீசப்பட்டது. இந்த வழக்கில் சேலம் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் கைது செய்யப்பட்டார் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.