சக்சஸ்! சென்னை டூ மைசூர்.. புயலாய் சீறிப் பாய்ந்த வந்தே பாரத் ரயில்! இனி மக்களுக்கு ஜாலி தான்!
சென்னை : இன்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் வந்தே பாரத் ரயில் சென்னையில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவிற்கு காலை 10.25 மணிக்கும் மைசூருவிற்கு மதியம் 12.30 மணி சென்றடைந்த நிலையில், சோதனை நோக்கங்களை பூர்த்தி செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பார்ப்பதற்கு அச்சு அசலாக புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் மேலும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது.
வந்தாச்சு சென்னை-பெங்களூர்-மைசூர் வந்தே பாரத் ரயில் தோராய அட்டவணை.. சதாப்தியை விட கொஞ்சம் வேகம்!
வந்தே பாரத்
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையையும், குஜராத்தை தலைநகர் காந்தி நகரையும் 7 மணி நேரத்திற்குள் இணைக்கும் வல்லமை கொண்டவை இந்த வந்தே பாரத் ரயில்கள். கிளாசில் வைக்கப்பட்ட தண்ணீர் சிந்தாமல் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில்கள் இணையத்தில் பேசுபொருளானது. இது மட்டுமல்லாது பல வசதிகள் இந்த ரயில்கள் உள்ளன.
பயணிகளுக்கு வசதிகள்
எக்ஸ்பிரஸ் , சதாப்தி ரயில்களை விட வேகம் என்பதோடு, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் இதில் வழங்கப்படும். அதிவேக இண்டர்நெட், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி போன்ற சேவைகளோடு, 24 மணி நேரமும் உணவு குடிநீர் போன்ற வசதிகளோடு பயணிகளுக்கு பாதுகாப்பும் அதிகரிப்புள்ளது.
சென்னை - மைசூர்
ஏற்கனவே இந்தியாவின் நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஐந்தாவது வழித்தடமாக சென்னை மைசூர் இடையே இயக்கப்பட இருக்கிறது. இதற்காக இன்று சோதனை ஓட்டம் தொடங்கி நடைபெற்றது. குறைவான வேகத்தில் இருந்து அதிவேகம் வரை இந்த சோதனையானது நடைபெற்றது.
சோதனை ஓட்டம்
ஒரு மார்க்க சோதனை முடிவடைந்துள்ள நிலையில், சோதனையில் எந்த குறைபாடுகளும் இல்லை என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 11ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது. சென்னை மைசூர் இடையே பெங்களூரு நகரையும் இணைக்கும் இந்த ரயில் சேவையை 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்னை - மைசூர் வந்தேபாரத் ரயில் சேவை இருக்கும். காலை 5.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிளம்பும் ரயில், மதியம் 12.30 மணிக்கு மைசூரை சென்றடையும். 504 கிலோ மீட்டர் தூரத்தை மணிக்கு 76 கிமீ வேகத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூர் தவிர வேறு எந்த ஊரிலும் நிற்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.