சட்டத்திற்கு புறம்பாக நிலத்தடி நீரை உறிஞ்சினால் வாகனங்கள் பறிமுதல்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சினால் மின் மோட்டார்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க கோரி, சென்னையை சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தாம்பரம் தாலுகா, செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட கவுரிவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் சிலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை திருடுகின்றனர். நீரை திருடி லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலமாக விற்பனை செய்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
விவசாய தேவைகளுக்கு என கூறி மின் இணைப்பைப் பெற்று விட்டு, தற்போது அந்த மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சி வணிக நோக்கில் விற்பனை செய்கின்றனர். உரிய உரிமம் பெறாமல் இரவு, பகலாக நிலத்தடி நீர் சட்டவிரோதமாக உறிஞ்சி விற்கப்படுகிறது.
பத்திரிக்கையாளர் கொலையில், சவுதி இளவரசர் மீது சந்தேகம் இல்லை.. ட்ரம்ப் பேட்டி
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்ச தடை விதித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் போது விவசாய நிலத்தில் அனுமதி பெற்று நீர் எடுக்கப்படுகிறதா, வணிக ரீதியாக நீர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்ய அவர்கள் உரிமம் பெற்றுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி, புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டால், மின் மோட்டார்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சட்டத்திற்கு புறம்பாக நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.