விஜய் கூறியதை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்க.. எனக்கு நேரம் இல்லைங்க- எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டு இருந்த தகவல் நேற்று வந்தது.
நடிகர் விஜய் இந்த கட்சியை துவங்கியதாக நேற்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக தகவல் வெளியானது. ஆனால் அந்தக் கட்சியை பதிவு செய்தது, தான், தான் என்று விஜய் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்தார்.
அடுத்த திருப்பமாக.. அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைந்து கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.
மேட்டரே வேறயாம்.. அவசரப்பட்ட எஸ்.ஏ.சி.. அதிரடியாக களம் குதித்த விஜய்.. நடந்தது இதுதானாமே!
எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
இதையடுத்து தந்தை மற்றும் மகன் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லையா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்விகள் எழுப்பியதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில்தான் சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று அவரிடம் நிருபர்கள் பேட்டியெடுத்தனர். வேண்டா வெறுப்பாகத்தான் அதில் பங்கேற்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்தார்.
கட்சியை பதிவு செய்தது ஏன்
எனக்கு ஊடகங்கள் வாயிலாகத் தான், எனது தந்தை புதிதாக கட்சி துவங்கி இருந்தது தெரியவந்தது என்று விஜய் தெரிவித்துள்ளாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்ற நிருபர்கள் கேள்விக்கு, 1993 ஆம் ஆண்டு ரசிகர் மன்றமாக துவங்கிய ஒரு அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியது. அந்த மக்கள் இயக்கத்தின் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்சியைப் பதிவு செய்துள்ளேன். இது அவரது பெயரில் புதிதாக துவங்கப்பட்டது கிடையாது. ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கட்சியை பதிவு செய்துள்ளோம் என்றார்.
கட்சி ஏன் துவங்கினேன்
கட்சி துவங்க இப்போது என்ன அவசியம் வந்தது, யாருக்காக இந்த கட்சி என்ற நிருபர்கள் கேள்விக்கு, நான் கட்சி துவங்குவதற்கான அவசியம் என்ன என்பது பற்றி இப்போது தெரிவிக்க முடியாது. ஒவ்வொருவராக தனித்து பேட்டி எடுக்க வாருங்கள் அப்போது சொல்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை என்றார். நேரமில்லையா, பதில் இல்லையா என்ற நிருபர்கள் கேள்விக்கு, ஏற இறங்க பார்த்துவிட்டு, "நேரமில்லை" என்றார்.
யாருக்கு நல்லது?
என்னுடைய ரசிகர்கள் யாரும் கட்சியில் சேர வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளாரே, இதை எப்படி புரிந்து கொள்வது என்ற கேள்விக்கு, இதை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். நல்லதை நினைத்து ஆரம்பித்தேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர். என்ன நல்லது? யாருக்கு நல்லது? என்று நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு இத்தனை மைக் முன்பாக பதில் கூறி பழக்கம் கிடையாது. தனித்தனியாக வேண்டுமானால் வாருங்கள் பதில் சொல்கிறேன் என்று கும்பிட்டு விட்டு கிளம்பிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். முன்னதாக, விஜய்க்கும் எனக்குமான சுமுக உறவு பற்றி கற்பனையாக சிலர் கூறுவதற்கு நான் விளக்கம் தர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.