24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் நடந்த அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள்.. அச்சத்தில் வேட்பாளர்கள்
Recommended Video
சென்னை: அடுத்தடுத்து ஆளும் கட்சியின் முக்கிய இரு தலைவர்களை குறிவைத்து தேர்தல் பரப்புரையின்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தேர்தல் களச் சூழல் சூடாகிப்போயுள்ளது.
அமைதி பூங்கா என அழைக்கப்படும் மாநிலம் தமிழகம். இங்கு மக்கள் என்றைக்கும், வன்முறைக்கோ, வன்முறையாளர்களுக்கோ ஆதரவு அளித்ததில்லை. வன்முறையை கையிலெடுத்தால், தேர்தலின்போது, அந்த கட்சியை துரத்தியடித்து, துவம்சம் செய்துவிடுவார்கள் மக்கள்.
இதனால்தான், 39+1 தொகுதிகளை கொண்ட தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிகிறது.
அது இந்திய ராணுவம் இல்லை.. மோடியின் சேனை.. சொல்லுங்க.. சர்ச்சையை ஏற்படுத்திய ஆதித்யநாத்!
தமிழகத்திற்கு பெருமை
பக்கத்தில் உள்ள கர்நாடகாவை பாருங்கள். வெறும் 28 லோக்சபா தொகுதிகள்தான். ஆனால், 2 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. காரணம், தமிழகம்தான் அமைதிப்பூங்காவாயிற்றே என்ற நம்பிக்கை. இப்படியாக நற்பெயர் பெற்ற தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற இரு சம்பவங்கள் மிக மோசமான முன் உதாரணங்களாக மாறியுள்ளன.
முதல்வர் மீது தாக்குதல்
அதில் முதலாவது நேற்று இரவு நடைபெற்றது. தஞ்சாவூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். இரவு 9 மணியளவில் ஒரத்தநாட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு செருப்பு எடப்பாடியின் வாகனம் மீது விழுந்தது. நல்ல வேளையாக அது முதல்வர் மீது படவில்லை. செருப்பு வீசிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நயினார் நாகேந்திரன்
இந்த நிலையில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மீது பெரியப்பட்டினம் பகுதியில் பாட்டில் வீசப்பட்டது. இதில் திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக நிர்வாகி உடையத்தேவர் மீது பாட்டில் பட்டு அவர் காயமடைந்துள்ளார். 24 மணி நேரம் கூட ஆகவில்லை. இப்படி இருவேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
பெரிய தாக்குதல்கள் இல்லை
தமிழகத்தை பொறுத்தளவில் தேர்தல்களின்போது தொண்டர்கள் மட்டத்தில் உரசல்கள், மோதல்கள், கை கலப்புகள் சாதாரணம். அதுவும் பெரிய அளவுக்கு செல்லும் முன்பாகவே கட்டுப்படுத்தப்படுவது வரலாறு. 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது கொல்லப்பட்டது பெரும் கறை என்றாலும், அது தேர்தல் போட்டியால் நடந்தது கிடையாது. இலங்கையிலிருந்து திட்டமிடப்பட்ட தாக்குதல். ஆனால் இம்முறை, தேர்தல் போட்டிக்காக, சாட்சாத் முதல்வரை குறி வைத்தும், வேட்பாளரை குறிவைத்துமெல்லாம் பொதுவெளியில் தாக்குதல் நடத்தப்படுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இடைத் தேர்தல்கள் ரத்து
பணப்பட்டுவாடா அதிகரிப்பு காரணமாக, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி இடைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டபோது, தேசிய அளவில், தமிழகத்துக்கு முதல் அவமானம் இழைக்கப்பட்டது. நாட்டிலேயே இப்படி ஒரு சம்பவம் இங்குதான் நடந்துள்ளது என பிற மாநில மக்கள் எள்ளி நகையாடியதை சோஷியல் மீடியாக்களில் அப்போது பார்க்க முடிந்தது. இப்போது வன்முறைகளும் நமக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றன.
பணம், ஆள் பலம்
பண பலம், ஆள் பலம் ஆகிய இவ்விரண்டும்தான், தமிழகத்தின் தேர்தல் சூழ்நிலை என்ற தவறான தகவலை நாம் மொத்த இந்தியாவிற்கும் இதன் மூலம் அனுப்பிக் கொண்டுள்ளோம். தேர்தலுக்கு இன்னும் சுமார் 2 வாரங்களுக்கு மேல் இருக்கும் சூழ்நிலையிலேயே இப்படி என்றால், தேர்தல் அருகே வரும்போது இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் சாதாராண மக்களுக்கு எழாமல் இல்லை.